Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

பெருந்துறை, கருமாண்டிசெல்லிப்பாளையம் பேரூராட்சிகளை இணைத்து புதிய நகராட்சி

Print PDF
தின மணி                   19.02.2013

பெருந்துறை, கருமாண்டிசெல்லிப்பாளையம் பேரூராட்சிகளை இணைத்து புதிய நகராட்சி

பெருந்துறை, கருமாண்டி செல்லிப்பாளையம் பேரூராட்சிகளை இணைத்து புதிய நகராட்சியை உருவாக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

இக்கட்சியின் ஒன்றிய அளவிலான ஆலோசனைக் கூட்டம் பெருந்துறையில் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு ஒன்றியத் தலைவர் டி.என்.ஆறுமுகம் தலைமை வகித்தார். ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவர் பி.ஜி.மோகன்குமார், கோட்ட அமைப்பு செயலர் எஸ்.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: பெருந்துறை பேரூராட்சியில் ரூ.54 கோடியில் பாதாளச் சாக்கடைத் திட்டம் செயல்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது வரவேற்புக்குரியது.

கருமாண்டிசெல்லிப்பாளையம், பெருந்துறை பேரூராட்சி ஆகியவை இணைந்து தான் பெருந்துறை நகரமாக உள்ளது. எனவே, இவை இரண்டையும் இணைத்து புதிய நகராட்சியை உருவாக்க வேண்டும். இரண்டு பேரூராட்சிகளிலும் ஒரே நேரத்தில் கூட்டு பாதாளச் சாக்கடை திட்டமாக செயல்படுத்தினால் கழிவு நீரை வெளியேற்ற எளிதாக இருக்கும்.

விஜய தமிழ்ப் புத்தாண்டை வரவேற்கும் விதமாகவும், தமிழ்ப் புத்தாண்டை கொண்டாடும் வகையிலும் பெருந்துறை ஒன்றியப் பகுதிகளில் ஏப்.14-ஆம் தேதி 50-க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் கொடியேற்றுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர் தீனதயாள் உபத்யாயாவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டத்தில் ஒன்றிய பொதுச் செயலராக எம்.கோபன், துணைத் தலைவர்களாக சி.டி.பழனிகுரு, கே.கே.மணிகண்டராஜ், செயலர்களாக கே.மாரப்பன், டி.கே.செந்தில்குமார், பொருளாளராக தனசேகரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
Last Updated on Thursday, 21 February 2013 11:35
 

மாநகராட்சி மலிவு விலை உணவகங்கள்: இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர்

Print PDF
தின மணி                   19.02.2013

மாநகராட்சி மலிவு விலை உணவகங்கள்: இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர்

சென்னை மாநகராட்சியின் சார்பில் கீழ்ப்பாக்கத்தில்  திறக்கப்படவுள்ள மலிவு விலை உணவகம்.

சென்னை மாநகராட்சியில் மலிவு விலை உணவகங்களை முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை (பிப். 19) திறந்து வைக்கிறார்.

சென்னை மாநகராட்சியில் ஒவ்வொரு வார்டிலும் ஒரு மலிவு விலை உணவகம் என மொத்தம் 200 உணவகங்கள் திறக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அண்மையில் அறிவித்தார். இதனடிப்படையில் முதல் கட்டமாக ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு உணவகம் வீதம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த உணவகங்களைத் தொடங்கி வைக்கும் வகையில், சாந்தோம் நெடுஞ்சாலை பதிவுத்துறை அலுவலகம் அருகில் உள்ள மாநகராட்சி கட்டடத்தில் நடைபெறும் விழாவில் மலிவு விலை உணவகத்தை செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கிறார்.

இதனையடுத்து 15 உணவகங்களும் செவ்வாய்க்கிழமை மதியம் முதல் செயல்படும்.

என்ன கிடைக்கும்? இந்த உணவகங்களில் ஒரு இட்லி (100 கிராம்) ரூ. 1-க்கும், தயிர் சாதம் (350 கிராம்) ரூ. 3-க்கும், சாம்பார் சாதம் (350 கிராம்) ரூ. 5-க்கும் கிடைக்கும். காலை 7 மணி முதல் 10 மணி வரையில் காலை உணவும், பகல் 12 மணி முதல் 3 மணி வரையில் மதிய உணவும் கிடைக்கும். வாரத்தின் 7 நாள்களும் உணவகங்கள் செயல்படும். இந்த உணவகங்கள் அனைத்தும் அந்தந்தப் பகுதியில் உள்ள சுய உதவிக்குழுக்கள் மூலம் நடத்தப்படும். இவர்களுக்கு மாநகராட்சி மூலம் ஊதியம் வழங்கப்படும். ஒரு உணவகத்தில் சுமார் 10 முதல் 12 பேர் பணியாற்றுவார்கள்.

கூடிய விரைவில் அனைத்து வார்டுகளிலும் மலிவு விலை உணவகங்கள் திறக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

முதல் கட்ட மலிவு விலை உணவகங்கள் செயல்படும் 15 இடங்கள்: திருவொற்றியூர் மாநகராட்சி வணிக வளாகம் (மண்டலம் 1, வார்டு 11), மணலி மாத்தூர் மாநகராட்சி கட்டடம் (மண்டலம் 2, வார்டு 19), மாதவரம் மேட்டூர் இணைப்பு சாலையில் உள்ள சமூக நலக் கூடம் (மண்டலம் 3, வார்டு 24), பழைய வண்ணாரப்பேட்டை பொம்மிசிவராமலு தெரு மாநகராட்சி கட்டடம் (மண்டலம் 4, வார்டு 48), நாட்டுப்பிள்ளையார் கோயில் தெரு மாநகராட்சிக் கட்டடம் (மண்டலம் 5, வார்டு 55).

புளியந்தோப்பு டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலையில் உள்ள பழைய மண்டல அலுவலகம் (மண்டலம் 6, வார்டு 73), ஓரகடம் கட்டபொம்மன் தெரு மாநகராட்சிக் கட்டடம் (மண்டலம் 7, வார்டு 79), கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில் உள்ள பழைய மண்டல அலுவலகம் (மண்டலம் 8, வார்டு 103), சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள மாநகராட்சிக் கட்டடம் (மண்டலம் 9, வார்டு 126), தியாகராய நகர் சிவஞானம் சாலையில் உள்ள மாநகராட்சிக் கட்டடம் (மண்டலம் 10, வார்டு 136).

மதுரவாயல் வடக்கு வாட வீதி அருகில் உள்ள மாநகராட்சிக் கட்டடம் (மண்டலம் 11, வார்டு 146), நங்கநல்லூர் நேரு நெடுஞ்சாலை மாநகராட்சிக் கட்டடம் (மண்டலம் 12, வார்டு 166), திருவான்மியூர் பி.ஜீ.ஈ. சாலையில் உள்ள மாநகராட்சிக் கட்டடம் (மண்டலம் 13, வார்டு 181), பெருங்குடி அண்ணா நெடுஞ்சாலையில் உள்ள வணிக வளாகம் (மண்டலம் 14, வார்டு 184),  துரைப்பாக்கம் கண்ணகி நகரில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய தொழிற்பயிற்சிக் கூடம் (மண்டலம் 15, வார்டு 195).
Last Updated on Thursday, 21 February 2013 11:26
 

ரூ. 3,500 கோடியில் வளர்ச்சிப் பணிகள்

Print PDF
தின மணி          18.02.2013

ரூ. 3,500 கோடியில் வளர்ச்சிப் பணிகள்

நாகை மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்காக தமிழக அரசு ரூ. 3,500 கோடி நிதி ஒதுக்கீடு அளித்துள்ளது என்றார் மாநில மீன்வளத் துறை அமைச்சர் கே.ஏ. ஜெயபால்.

நாகை நீலாயதாட்சியம்மன் கோவில் சன்னதி தெருவில் (நகராட்சியின் 26-வது வார்டு) சனிக்கிழமை நடைபெற்ற நியாய விலைக் கடைக்கான புதிய கட்டடத் திறப்பு விழாவில் அமைச்சர் பேசியது:

அனைத்துத் தரப்பு மக்களும் பயனடையும் வகையில், தமிழக அரசு பல்வேறு  நலத் திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்துகிறது. மக்களின் தேவைகளை அறிந்து நியாய விலைக் கடைகள் மூலமாக அனைத்துப் பொருள்களும் வழங்கப்படுகின்றன. நாகை சட்டப்பேரவை உறுப்பினரின் உள்ளூர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் ரூ. 4 லட்சமும், நகராட்சி நிதியாக ரூ. 1 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ரூ. 5 லட்சம் மதிப்பில் இந்த நியாய விலைக்கடைக்குப் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

அனைத்துத் துறைகளிலும் தமிழகம் முதன்மைப் பெற வேண்டும் என்ற நோக்கில் அரசு பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனடிப்படையில்,  நாகை மாவட்டத்தின் வளர்ச்சிப் பணிகளுக்காக தமிழக அரசு ரூ. 3,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதன்மூலம் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகிறது என்றார் ஜெயபால். விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் மு. ஆசியா மரியம் தலைமை வகித்தார்.

 மாவட்ட ஊராட்சித் தலைவர் ஏ.கே. சந்திரசேகரன், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் பாத்திமா சுல்தான், மாவட்ட வழங்கல் அலுவலர் சி. சித்திரைராஜூ, நகர்மன்றத் தலைவர் மஞ்சுளா சந்திரமோகன், நகர்மன்ற துணைத்  தலைவர் ஏ. சுல்தான் அப்துல் காதர், நகராட்சி ஆணையர் அப்துல் லத்தீப் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Last Updated on Monday, 18 February 2013 09:22
 


Page 235 of 841