தினமணி 17.08.2012
கண்காட்சி, பேச்சுப் போட்டி பரிசளிப்பு விழா
பண்ருட்டி, ஆக. 16: பண்ருட்டி நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்த கண்காட்சி மற்றும் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா புதன்கிழமை நடந்தது.
÷பண்ருட்டி நகராட்சி சார்பில் நகர எல்லைப் பகுதியில், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. மேலும் வணிக நிறுவனம், வியாபாரிகள், திருமண மண்டப உரிமையாளர்கள் உள்ளிட்டவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி பிளாஸ்டிக் ஒழிப்பில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
÷மேலும் நகராட்சி சார்பில் நகரில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களைக் கொண்டு பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பல்வேறு தலைமைப்புகளின் கீழ் கண்காட்சி, பேச்சு, ஓவியம், கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டது.
÷இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நகராட்சி வளாகத்தில் புதன்கிழமை நடந்தது. நகர்மன்றத் தலைவர் பி.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி கண்காட்சி மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும், கேடயத்தையும் வழங்கி பாராட்டினார்.
÷இதில் ஜான்டூயி மெட்ரிக்குலேஷன் பள்ளி, புனித அன்னாள் பள்ளி, அரசு மேல்நிலைப் பள்ளி, மேத்தா பள்ளி, சுப்புராய செட்டியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நகராட்சி பள்ளிகள் பரிசுகளையும், சான்றிதழ்களையும் பெற்றன. கண்காட்சியில் புனித அன்னாள் பள்ளி, ஜான்டூயி பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவை முதல் 3 இடங்களைப் பெற்றன.
÷விழாவில் ஆணையர் க.உமாமகேஸ்வரி, பொறியாளர் ராதா, சுகாதார அலுவலர் குமார், ஆய்வாளர் திண்ணாயிரமூர்த்தி, கவுன்சிலர்கள் ராஜதுரை, முருகன், கோவிந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.