தினமணி 16.08.2012
சிவகாசி நகராட்சியில் வெள்ளிக்கிழமைதோறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
சிவகாசி, ஆக. 15: சிவகாசி நகராட்சியில் இனிவரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைதோறும், மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெற உள்ளதாக, நகர்மன்றத் தலைவர் வெ.க. கதிரவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்த அவரது செய்திக் குறிப்பு: சிவகாசி நகராட்சிப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பலருக்கு தங்களது பிரச்னைகளை யாரிடம் கூறுவது எனத் தெரியாமல் இருந்து வருகின்றனர். நகராட்சி தொடர்பான குடிநீர் வசதி, சாலை, வாய்க்கால் ஆகிய வசதிகளுக்கும், வரி தொடர்பான பிரச்னைகள் உள்ளிட்ட பிரச்னைகளுக்கும், இனி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. நகர்மன்றத் தலைவர் அலுவலக அறையில் வெள்ளிக்கிழமைதோறும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை, தங்களது குறைகளை மனுக்களாகக் கொடுத்து தீர்வு காண கோரப்படுகின்றனர். இதில், நகர்மன்றத் தலைவரை நேரில் சந்தித்து பிரச்னைகள் குறித்து தெரிவிக்கலாம். இந்த வாய்ப்பினை, பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.