Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

இரவு கூடாரங்களில் அடிப்படை வசதி செய்து தர உயர் நீதிமன்றம் உத்தரவு

Print PDF
தினமலர்        17.12.2010

இரவு கூடாரங்களில் அடிப்படை வசதி செய்து தர உயர் நீதிமன்றம் உத்தரவு


புதுடெலி, டிச.17: இரவுக் கூடாரங்களில் தங்கியுள்ளவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று மாநகராட்சி, டெல்லி மேம்பாட்டு ஆணையம், குடிநீர் வாரியம் மற்றும் நகராட்சி கவுன்சிலுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்க மாநகராட்சி உத்தரவிட்டது. அப்போது பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டு இருந்த இரவு நேர கூடாரங்களும் இடித்து தள்ளப்பட்டன. இதனால் வீடு இல்லாதவர்கள், ஆதரவற்றவர்கள் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட கைம்பெண்கள் ஆகியோர் தங்க இடம் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டனர். எனவே அவர்கள் தங்குவதற்காக, இரவு நேர கூடாரங்களை உள்ளாட்சி அமைப்புக்கள் ஏற்படுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் ஜனவரி மாதம் உத்தரவிட்டது.

அதன்படி டெல்லியில் மொத்தம் 84 இடங்களில் இரவு நேர கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த இரவு நேர கூடாரங்களில் குடிநீர், மின் வசதி, கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதி செய்து கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டு இருந்தது.

ஆனால் அந்த ‘அடிப்படை வசதிகள் எதுவும் அங்கு இல்லை’ என்று செய்திகள் வெளியாயின. அதையே ஆதாரமாக கொண்டு, மாநகராட்சி, டெல்லி மேம்பாட்டு ஆணையம், குடிநீர் வாரியம் மற்றும் நகராட்சி கவுன்சில் மீது உயர் நீதிமன்றம் ஒரு தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது.

அந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி மன்மோகன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியிருப்பதாவது:

நகரில் கட்டப்பட்டுள்ள 84 இரவு நேர கூடாரங்களிலும் போதுமான அடிப்படை வசதி எதுவும் செய்து தரப்படவில்லை. குடிநீர், மின்சாரம் மற்றும் கழிப்பிடம் போன்ற எந்த அடிப்படை வசதியும் அங்கு இல்லை.

இதற்கு காரணம், மாநகராட்சி, நகராட்சி கவுன்சில், குடிநீர் வாரியம், டெல்லி மேம்பாட்டு ஆணையம் ஆகிய அமைப்புக்களிடையே சரியான ஒருங்கிணைப்பும், ஒத்துழைப்பும் இல்லாததுதான். அதனால்தான் இரவு நேர கூடாரங்களில் போதுமான வசதிகளை செய்து கொடுக்க முடியவில்லை.

எனவே அடுத்த விசாரணைக்குள் இந்த வசதிகள் அனைத்தையும் உள்ளாட்சி அமைப்புக்கள் செய்து தரவேண்டும்.

அதற்கிடையே இப்பணிகளை செய்வது பற்றி ஆலோசிக்க மாநகராட்சி, நகராட்சி கவுன்சில், குடிநீர் வாரியம், டெல்லி மேம்பாட்டு ஆணைய உயர் அதிகாரிகளின் கூட்டத்துக்கு அரசு தலைமை செயலாளர் ஏற்பாடு செய்ய வேண்டும்.

அத்துடன் அடுத்த விசாரணையின் போது இரவு நேரக் கூடாரங்களில் செய்யப்பட்டுள்ள வசதிகள் பற்றி நீதிமன்றத்தில் இந்த அமைப்புக்கள் தெரியப்படுத்த வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.
 

ஆசிய விளையாட்டு கபடி பிரிவில் தங்கம் வென்ற வீரர்களுக்கு தலா ரூ. 5 லட்சம் பரிசு

Print PDF
தினகரன்       17.12.2010

ஆசிய விளையாட்டு கபடி பிரிவில் தங்கம் வென்ற வீரர்களுக்கு தலா ரூ. 5 லட்சம் பரிசு


புதுடெல்லி, டிச. 17: சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டு கபடி போட்டியில் தங்கம் வென்ற டெல்லியை சேர்ந்த 3 வீரர்களுக்கு, தலா ரூ. 5 லட்சம் வழங்கப்படும்’ என்று மாநகராட்சி நிலைக்குழு தலைவர் யோகேந்தர் சந்தாலியா கூறினார்.

மாநகராட்சி நிலைக்குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்துக்கு அதன் தலைவர் யோகேந்தர் சந்தாலியா தலைமை தாங்கினார். இதில், பா.ஜ. உறுப்பினர் விஜய் பண்டிட் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:

சமீபத்தில் சீனாவின் குவாங்சோ நகரில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய கபடி அணி தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தது.

அந்த அணியில் டெல்லி பாலம் கவோனை சேர்ந்த பூஜா சர்மா, நிஜாம்பூர் கவோனைச் சேர்ந்த ராகேஷ் மற்றும் மஞ்சித் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர்.

உலக மல்யுத்த சாம்பியனாக திகழும் சுசில் குமாரை மாநகராட்சி பாராட்டி கவுரவித்தது போல இந்த கபடி வீரர்களுக்கும் தலா ரூ. 5 லட்சம் வழங்கி பெருமைப்படுத்த வேண்டும்.

இவ்வறு தீர்மானத்தில் கூறப்பட்டு இருந்தது. அந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
அதன் பிறகு நிருபர்களிடம் யோகேந்தர் சந்தாலியா கூறுகையில், ‘கபடி விளையாட்டு வீரர்கள் மூவருக்கும் மாநகராட்சி சார்பில் தலா ரூ. 5 லட்சம் வழங்கப்படும். இதற்கான பாராட்டு விழா விரைவில் நடத்தப்படும். இதன் மூலம் விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் மாநகராட்சி பாரபட்சம் காட்டவில்லை என்பது நிரூபணமாகும்’ என்றார்.
 

பாதாள சாக்கடை கட்டணத்துக்கு அரசு மானியம் வழங்க வலியுறுத்தல்

Print PDF

தினகரன்      17.12.2010

பாதாள சாக்கடை கட்டணத்துக்கு அரசு மானியம் வழங்க வலியுறுத்தல்

விருதுநகர், டிச. 17: பாதாளச்சாக்கடை திட்டத்திற்காக மக்கள் செலுத்த வேண்டிய வைப்பு நிதிக்கு அரசே மானியம் வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

விருதுநகர் நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. கடந்த 2006ம் ஆண்டு இங்கு ரூ. 23 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டத்தை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். இத் திட்டத்தின் கீழ் பணிகள் 90 சதவீதத்திற்கு மேல் முடிந்துவிட்டது. பாதாளச்சாக்கடை திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு இணைப்பு பெற ரூ. 3 ஆயிரம், கடைகளுக்கு ரூ. 5 ஆயிரம் என டெபாசிட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டணத்தை ஒரே தவணையில் கட்டவேண்டும் என நகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், விருதுநகர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விருதுநகர் பகுதி நகரச்செயலாளர் காதர் மொய்தீன் கூறுகையில், ''பாதாளச்சாக்கடை திட்டத்திற்கு அதிகளவு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக பல கோடி ரூபாயை அரசு செலவிட்டுள்ளது. கட்டணத்தை மக்களிடம் வசூலிக்காமல் அரசே மானியமாக வழங்கவேண்டும்,” என்றார்.

விருதுநகர் பாதாள சாக்கடை திட்டத்திற்கு அரசு முழு மானியம் அளிக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு நகர்நல அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.


தமிழக முதல்வருக்கு விருதுநகர் நகர்நல அமைப்பு சார்பில் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

விருதுநகரில் பாதாள சாக்கடை திட்டம் 2006ல் துவங்கப்பட்டு 2008ல் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுவரை பணிகள் நிறைவடையவில்லை. பாதாள சாக்கடை திட்டப்பணியால் விருதுநகரில் சாலைகள் படுமோசமான நிலைக்கு சென்றுவிட்டன.

பாதாள சாக்கடை திட்டத்திற்கு பொதுமக்கள் பங்களிப்பு தொகையாக குறைந்தபட்சம் ரூ. 3 ஆயிரம் முதல் அதிகப்பட்சமாக ரூ. 35 ஆயிரம் வரை டெபாசிட் செலுத்த நிர்பந்தம் செய்யப்படுகிறது. வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் செலுத்த வேண்டிய தொகை யை முழு மானியமாக அரசு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


Page 280 of 841