தினகரன் 02.12.2010
நீர்வரத்து அதிகம் உள்ளதால் 2 முறை குடிநீர் விநியோகம் குடந்தை நகர்மன்ற கூட்டத்தில் வலியுறுத்தல்
கும்பகோணம், டிச.2: கும்பகோணம் நகர்மன்ற கூட்டம் தலைவர் தமிழழகன் தலைமையில் நேற்று நடைபெற்றது. துணைத்தலைவர் தர்மபாலன், ஆணையர் வரதராஜன், பொறியாளர் கனகசுப்புரத்தினம் மற்றும் அனைத்து கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
சுந்தரபாண்டியன் (திமுக): கும்பகோணத்தில் வீட்டு வரி விதிக்கப்படாததால் பாதாள சாக்கடை இணைப்பு வழங்க முடியவில்லை. எனவே சாலை, புறம்போக்கு கூரை வீடு களை வரைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.
கிருஷ்ணமூர்த்தி (திமுக): நகரில் சுற்றித்திரியும் மாடுகளையும், நாய்களையும் கட்டுப்படுத்தவேண்டும் என்றார்.
ஆணையர்: மாடுகளை அப்புறப்படுத்த நிரந்தர முடிவாக சட்டப்பூர்வமாக செய்யவேண்டும். தட்சிணாமூர்த்தி (திமுக): தெரு வில் சுற்றித்திரியும் மாடு, நாய்களை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆணையர்: நாய், பன்றிகளை கட்டுப்படுத்த மட்டுமே முடியும். வருவாய்துறையில் கேட்டால் மாடுகளை கொண்டு வந்துவிடுவதற்கு இடம் ஏற்பாடு செய்து கொடுக்கலாம்.
ஆதிலட்சுமி(அதிமுக): தெருவிளக்கு அமைப்பதற்கு இரண்டு வார்டுகளுக்கு மின்கட்டண காப்புத் தொகை செலுத்துவதற்கு பொருள் வைக்கப்பட்டுள் ளது. எனது வார்டில் நீண்ட நாட்களாக வடக்குவீதியில் தெருவிளக்கு வசதி கேட்டு வருகிறேன். கவுன்சிலர்கள் கொடுக்கும் மனுக் கள் பதிவேடுகளில் பதியவைத்து பராமரிக்கப்படுகிறதா?
பொறியாளர்: வார்டு வாரியாக சொல்லப்படும் பொதுவான செய்திகள் பதியப்படுகிறது.
துளசிராமன்(அதிமுக): மேட்டூரில் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது. இப்போதாவது இரண்டுமுறை தண்ணீர் விடக்கூடாதா?
ராஜாநடராஜன் (அதிமுக): கரும்பாயிரம் பிள்ளையார்கோவில் அருகில் குழந்தைகள் அங்கன் வாடி மையத்திற்கு உடன் சுற்றுச்சுவர் எழுப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
தலைவர்: உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பீட்டர்பிரான்சிஸ் (பாமக): எம்.ஜி.ஆர். நகரில் குளம்போல் தண்ணீர் சூழ்ந்து ஒரு வீடு இடிந்து விழுந்துள்ளது. உடன் நகராட்சி அதிகாரிகளுக்கு போன் செய்தேன். யாரும் போன் எடுக்கவில்லை என்றார்.
கூட்டத்தில், மின்இணைப்பு காப்புத்தொகை செலுத்துவது, வீரபத்திரசந்து மண்சாலையை சிமெண்ட் தளமாக்குவது என்பது உட்பட ரூ.32.90 லட்சத்திற்கு வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ள தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.