தினகரன் 08.11.2010
மழைபாதிப்பு சமாளிக்க உடனடி நடவடிக்கை
சென்னை, நவ. 8: மழை பாதிப்புகளை சமாளிக்க அனைத்து ஏற்பாடுகளுடன் சென்னை மாநகராட்சி தயார் நிலையில் உள்ளது என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மேயர் மா.சுப்பிரமணியன், மாநகர ஆணையர் கார்த்திகேயன், வி.எஸ்.பாபு, எம்.எல்.ஏ., ஆகியோருடன் சென்று, பெரம்பூர் பேரக்ஸ் சாலை மாநகராட்சி நிவாரண மையத்தில் தயாரிக்கப்படும் உணவையும், அதன் பிறகு கணேசபுரத்தில் மோட்டார் பம்புகள் மூலம் மழைநீர் அகற்றும் பணியினையும் பார்வையிட்டார்.
பின்னர் துணை முதல்வர் கூறியதாவது:
தாழ்வான பகுதிகள் மற்றும் சுரங்கப் பாதைகளில் தேங்கும் மழைநீரை அகற்ற 150 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு, பயன்படுத்தப்படுகிறது. கூடுதலாக 53 எச்.பி. திறன் கொண்ட 7 மோட்டார் பம்புகள் பயன்படுத்தப்படுகிறது. இது தவிர மோட்டார் கட்டு மரங்கள் 8, 4 ரப்பர் படகுகள் தயார் நிலையில் உள்ளன. படாளம், பேசின்பாலம், சிந்தாதிரிப்பேட்டை, கோபாலபுரம் ஆகிய 4 இடங்களில் நிரந்தர மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 30 மருத்துவக் குழுக்கள் மற்றும் 10 நடமாடும் மருத்துவக் குழுக்கள் என 40 குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. மாடன் ரொட்டி தயாரிக்கும் நிறுவனத்திடம் எடுத்துரைக்கப்பட்டு, 3 வேளைகளிலும் தேவைப்படும் அளவிற்கு ரொட்டிகள் வழங்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. முதல் கட்டமாக கூவம் ஓரம் உள்ள மக்களுக்கு வழங்க 2 ஆயிரம் ரொட்டிகள் கொள்முதல் செய்யப்பட்டு, வழங்கப்படுகிறது.
பொதுமக்கள் மரங்களின் அருகில் ஜாக்கிரதையாக செல்லுமாறும், வாகனங்களை நிறுத்திவைக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரையில் சென்னையில் 30 மரங்கள் விழுந்துள்ளன. அவை மாநகராட்சி மூலம் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. 20 நவீன மரம் வெட்டும் கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு துணை முதல்வர் தெரிவித்தார்.