Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

குடியரசு தின விழா: சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சிப் பணியாளர்களுக்கு சான்றிதழ்கள்

Print PDF

தினமணி          27.01.2014 

குடியரசு தின விழா: சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சிப் பணியாளர்களுக்கு சான்றிதழ்கள்

திருச்சி மாநகராட்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் 25 ஆண்டுகள் மாசற்ற பணிபுரிந்த 33 பணியாளர்களுக்கு  பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மாநகராட்சி மைய வளாகத்தில் நடைபெற்ற விழாவில் தேசியக் கொடியேற்றிய மேயர் அ.ஜெயா இந்த சான்றிதழ்களை வழங்கினார்.

வைகுண்ட ஏகாதசி திருவிழா பணிகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள்,  பேருந்து விரைவுத் திட்டம் மற்றும் நவீன ஆட்டிறைச்சி கூடம் அமைக்க கருத்துரு தயார் செய்த அலுவலர்கள், பஞ்சப்பூர் பூங்கா அமைக்கும் பணியில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள், பூங்கா பராமரிப்புப் பணிகள் மேற்கொண்ட அலுவலர் ஆகியோருக்கும், மாநகராட்சிப் பள்ளி கலைநிகழ்ச்சிகள்,  யோகாசனப் போட்டிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கும் பாராட்டுச் சான்றிதழ்களை மேயர் வழங்கினார். பிளாஸ்டிக் உபயோகத்தை கட்டுப்படுத்தும் பணியை மேற்கொண்ட சுகாதார ஆய்வாளர்கள் 5 பேருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

அரசு தலைமை மருத்துவமனை வளாகத்திலுள்ள மகாத்மாகாந்தியடிகள் அஸ்தி மண்டபம், போர்வீரர்கள் நினைவுத் தூணில் மலரஞ்சலி செலுத்திய மேயர், காந்தி மார்க்கெட்டிலுள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார்.

இந்த நிகழ்வுகளில் துணை மேயர் மரியம் ஆசிக், ஆணையர் வே.ப. தண்டபாணி, கோட்டத் தலைவர்கள்  ஜெ.சீனிவாசன், எம். லதா, என். மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

அர்ப்பணிப்பு உணர்வுடன் கடமையாற்ற வேண்டும்

Print PDF

தினமணி          27.01.2014 

அர்ப்பணிப்பு உணர்வுடன் கடமையாற்ற வேண்டும்

சுற்றுப்புறச் சூழல், சுகாதாரத்தில் முதன்மை மாநகரம் என்ற நிலையை அடைய மாநகராட்சியின் அனைத்துத் தரப்பு அலுவலர்களும், மக்கள் பிரதிநிதிகளும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் கடமையாற்ற வேண்டும் என்று குடியரசு தினவிழாவில் மேயர் அ.விசாலாட்சி ஞாயிற்றுக்கிழமை பேசினார்.

 திருப்பூர் மாநகராட்சியில், 65-ஆவது குடியரசு தினவிழா மேயர் அ.விசாலாட்சி தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் சு.குணசேகரன் முன்னிலை வகித்தார். மாநகரப் பொறியாளர் எம்.ரவி வரவேற்றார்.

 இதில், தேசியக்கொடியேற்றி மேயர் அ.விசாலாட்சி பேசியது:

உலகம் வியந்து பார்க்கும் ஈடு இணையற்ற அரசியல் அமைப்புச் சட்டம் நம்முடையது. வேற்றுமையில் ஒற்றுமையை காணும் நாடு இந்தியா.

  தமிழகத்தில்,  சுத்தம், சுகாதாரம், சுற்றுப்புறச் சூழலின் நலன் காக்க முதல்வர் பல்வேறு திட்டங்களையும், அதற்கான நிதியையும் வழங்கி வருகிறார்.  பொதுசுகாதாரத்தின் மீது தனி அக்கறை செலுத்தி வருகிறார் முதல்வர். இந்த ஆண்டில் ரூ. 10 கோடி செலவில் நவீன சுகாதார வளாகங்கள் கட்டுவதற்கு உத்தரவிட்டுள்ளார். ரூ. 170 கோடி செலவில் ஏற்கனவே மகளிருக்கான அடிப்படை சுகாதார வசதிகள் முதல்வரின் ஆட்சியில் உறுதி செய்யப்பட்டுள்ளது.   திருப்பூர் பகுதியில் சுத்தத்தையும், சுகாதாரத்தையும் பேணிப் பாதுகாக்க நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சுற்றுப்புறச் சூழலில் முதன்மையான மாநகரம் திருப்பூர் மாநகரம் என்ற நிலையை அடைய, மாநகராட்சியின் அனைத்துத் தரப்பு அலுவலர்களும், மக்கள் பிரதிநிதிகளும், மக்களும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் கடமையாற்ற வேண்டும் என்றார்.

  கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற  மாணவ, மாணவிகளுக்கு மேயர், துணை மேயர்

ஆகியோர் பரிசுகளை வழங்கினர். அதன்பின், மாணவ, மாணவியர் பேரணி நடைபெற்றது. பேரணியாகச் சென்று, குமரன் சாலையில் உள்ள திருப்பூர் குமரன் நினைவிடத்தில் மேயர் அ.விசாலாட்சி, துணை மேயர் சு.குணசேகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 இவ் விழாவில், மண்டலத் தலைவர்கள் வி.ராதாகிருஷ்ணன், ஜான், கிருத்திகா சோமசுந்தரம், டெக்ஸ்வெல் முத்து, கவுன்சிலர்கள், எம்.ஜி.ஆர்.மன்றச் செயலாளர் கருவம்பாளையம் மணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

 

வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம்

Print PDF

தினமணி          27.01.2014 

வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம்

வந்தவாசி நகராட்சி சார்பில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.

 வந்தவாசி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கிய ஊர்வலத்தை வட்டாட்சியர் எஸ்.ராஜலட்சுமி தொடங்கி வைத்தார். வந்தவாசி டிஎஸ்பி மகேந்திரன், நகராட்சி ஆணையர் எஸ்.லட்சுமி, நகராட்சி பொறியாளர் டி.ராஜவிஜயகாமராஜ், துணை வட்டாட்சியர்(தேர்தல்) டி.அரிதாஸ் மற்றும் வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரி மாணவியர், பள்ளி மாணவ, மாணவியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது.

 பின்னர் வந்தவாசி மேற்கு தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற கூட்டத்தில் வாக்குரிமை, வாக்களிப்பதின் முக்கியத்துவம் உள்ளிட்டவை குறித்து விளக்கிக் கூறப்பட்டது.

 


Page 34 of 841