தினகரன் 02.11.2010
உள்ளாட்சி தின விழா
அறந்தாங்கி, நவ.2: அறந்தாங்கி நகராட்சியில் நேற்று உள்ளாட்சி தினவிழா நடைபெற்றது. புதுக்கோட்டை சாலையில் உள்ள கலவை உரக்கிடங்கில் மகளிர் சுய உதவிக்குழுவிணர் மற்றும் துப்புரவு பணியாளர்கள் சுகாதார பணிகளை மேற்கொண்டணர். பின்னர் நகராட்சி அலுவலகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உள்ளாட்சியில் நல்லாட்சி என்னும் தலைப்பில் பேச்சுப்போட்டி நடந்தது. நகர்மன்ற தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார். ஆணையர் அசோக்குமார், நகர்மன்ற துணைத் தலைவர் கட்சு முகமது, நகராட்சி பொறியாளர் தங்கபாண்டியன் முன்னிலை வகித்தனர்.
6,7 வகுப்புகளுக்கும், 9,10,12 ஆகிய வகுப்புகளுக்கும் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. 6,7 பிரிவில் அறந்தாங்கி எல்என்புரம் நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவன் சுரேஷ் முதல்பரிசும், காமராஜர் நடுநிலைப்பள்ளி மாணவி புவனேஸ்வரி 2ம்பரிசும், நகராட்சி நடுநிலைப்பள்ளி மேற்கு மாணவன் பிரவீன் 3ம் பரிசும், 9,10,12ம் வகுப்பு பிரிவில் சேக்அப்துல்லா, சுதன்குமார், பவித்ரன் ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்தனர். போட்டியின் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் மாரியப்பன் பேசியதாவது: 2006 முதல் நகராட்சி தலைவராக பொறுப்பேற்ற பின்னர் அறந்தாங்கி நகராட்சியில் ரூ.1,553.30 லட்சம் மதிப்புள்ள பல்வேறு பணிகள் நடைபெற்றது. இதில் சில பணிகள் நிறைவுபெற்றுள்ளன. விரைவில் அறந்தாங்கி நகராட்சியில் ரூ.3 கோடி மதிப்புள்ள சிறப்பு சாலை திட்டம் துவங்கப்படவுள்ளது. நகராட்சியில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்னையை போக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு நகர்மன்ற மாரியப்பன் பேசினார்.
நகர்மன்ற உறுப்பினர்கள் முரளிதரன், ராஜேந்திரன், ரமேஷ், வெங்கடேசன், பார்த்திபன், அரசு வக்கீல் வெங்கடேசன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் நாகராஜன், முருகநாராயணன், நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
போட்டியில் வென்ற மாணவர்களுக்கு நகர்மன்ற தலைவர் மாரியப்பன் பரிசு வழங்கினார். முன்னதாக நடந்த மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியை எம்எல்ஏ உதயம் சண்முகம் துவக்கி வைத்தார். ஆர்டிஓ நாகேந்திரன் தலைமை வகித்தார்.