தினகரன் 28.06.2010
ராமேஸ்வரத்தில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பாலித்தீன் பைகள் பறிமுதல்
ராமேஸ்வரம், மே 28: ராமேஸ்வரத்தில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பாலித்தீன் பைகளை கைப்பற்றினர்.
ராமேஸ்வரம் தீவு பகுதியில் பாலித்தீன் பைகள் விற்பனை செய்யவோ பயன்படுத்தவோ கூடாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை கடந்த ஜனவரி முதல் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை ராமேஸ்வரம் தாசில்தார் ராஜேந்திரன், நகராட்சி ஆணையர் (பொறுப்பு), சுப்பிரமணியன் ஆகியோர் ராமேஸ்வரம் பகுதியில் உள்ள வர்த்தக நிறுவனங்கள், கடைகள், ஓட்டல்கள் ஆகியவற்றில் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனை கடைத்தெரு, ரயில்வே பீடர் ரோடு, மேலவாசல் மற்றும் தங்கச்சிமடம் பகுதிகளில் நடந்தது.
இதில் கடைகளில் இருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பாலித்தீன் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடை உரிமையாளர்களுக்கு ரூ.1500 வரை அபராதம் விதிக்கப்பட்டது. பாலித்தீன் பைகளை பயன்படுத்திய பொதுமக்களுக்கும் ரூ.150 அபராதம் விதிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இந்த சோதனையின்போது ராமேஸ்வரம் நுகர்வோர் சங்க தலைவர் அசோகன், இணைச்செயலாளர் ரவி, நகராட்சி உறுப்பினர் பாலமுருகன், விபத்து மீட்பு சங்க தலைவர் களஞ்சியம் ஆகியோர் அதிகாரிகளுடன் சென்றனர்.