தினமணி 02.06.2010
கரூர் நகராட்சியில் அமலுக்கு வந்தது: "பிளாஸ்டிக் கப்' களுக்கான தடை
கரூர், ஜூன் 1: கரூர் நகராட்சியில் பிளாஸ்டிக் கப்புகளை பயன்படுத்துவதற்கான தடை செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வந்தது.
பிளாஸ்டிக் கழிவுகளினால் ஏற்படும் ஆபத்திலிருந்து பொதுமக்களைக் காப்பாற்றவும், தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் கப்புகள், பைகளால் சாக்கடை மற்றும் நீரோட்டங்களில் ஏற்படும் பாதிப்பைத் தடுக்க கரூர் நகராட்சி ஆணையர் ஆர். உமாபதி முடிவு செய்தார். இதையடுத்து, கரூர் நகராட்சிப் பகுதியில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கப்புகள் உள்ளிட்ட பொருள்களுக்கு தடை விதித்து நகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இத்தீர்மானத்தை விளக்கியும், பிளாஸ்டிக் இல்லாத கரூர் நகரை உருவாக்க ஒத்துழைப்பு வழங்கக் கோரியும் நகராட்சியின் 36 வார்டுகளிலுமுள்ள டீக்கடை, மளிகைக் கடை, பெட்டிக்கடைகளிலும், பொதுமக்களிடமும் துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது. மேலும், கடைகளுக்கு நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டு கடைக்காரர்களிடம் கையெழுத்தும் பெறப்பட்டது. இத்தடை ஜூன் 1-லிருந்து அமலுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, கரூர் நகராட்சியின் 7 மண்டலங்களுக்குள்பட்ட கடைகளில் பிளாஸ்டிக் கப்புகள் விற்பனை செய்யப்படுகிறதா என்று ஆய்வு நடத்த நகராட்சி ஆணையர் உத்தரவிட்டார்.
நகர் நல அலுவலர் கே. சந்தோஷ்குமார் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள், மேற்பார்வையாளர்கள், பணியாளர்கள் நகராட்சிப் பகுதிகளிலுள்ள கடைகளில் சோதனை நடத்தினர். இதில், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஏராளமான பிளாஸ்டிக் கப்புகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சில இடங்களில் கடைக்காரர்கள் நகராட்சி ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். எனினும், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கப்புகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து நகராட்சி ஆணையர் ஆர். உமாபதி கூறியது:
நகராட்சிப் பகுதியில் பிளாஸ்டிக் கப்புகள் விற்பனை செய்யக் கூடாது என்ற தடையாணை ஜூன் 1 முதல் அமலுக்கு வருகிறது.
மீறி விற்பனை செய்யப்படும் கடைகளில் சுகாதார ஆய்வாளர்கள் திடீர் ஆய்வு நடத்தி விற்பனை செய்யப்படும் பொருள்களைப் பறிமுதல் செய்வர். கரூர் நகராட்சியில் பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை முழுமையாக ஓழிக்கப்படும் வரை இந்த ஆய்வு தொடரும் என்றார் அவர்.