தினமணி 03.06.2010
தடையை மீறி விற்பனை: பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
களியக்காவிளை, ஜூன் 2: களியக்காவிளையில் தடையை மீறி விற்பனை செய்த பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 20 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்ய ஏப்ரல் 1-ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது.
இதையடுத்து, தற்போது பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் கப்புகளின் பயன்பாடுகள் பெருமளவு குறைந்துள்ளன.
இந்நிலையில், களியக்காவிளை பகுதியில் உள்ள கடைகளில், களியக்காவிளை பேரூராட்சி அலுவலக உதவியாளர் முருகன் தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் செல்லத்துரை உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் பல்வேறு சில்லறை விற்பனைக் கடைகளில் இருந்து 20 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பைகள் கண்டுபிடிக்கப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டதாக பேரூராட்சி பணியாளர்கள் தெரிவித்தனர்.
களியக்காவிளை பேருந்து நிலையம் அருகேயுள்ள பிளாஸ்டிக் பொருள்கள் மொத்த விற்பனை செய்யும் கடையில் ஆய்வு செய்ய அதிகாரிகளை அனுமதிக்காததையடுத்து, அக் கடைகாரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.