தினகரன் 07.06.2010
50 மைக்ரானுக்கு குறைவான பாலிதீன் பைகளை பயன்படுத்தினால் தண்டனையுடன் ரூ.1 லட்சம் அபராதம் துணை ஆட்சியர்
புதுச்சேரி, ஜூன் 7: 50 மைக்ரானுக்கு குறைவான பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோருக்கு சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என புதுவை துணை மாவட்ட ஆட்சியர்(வருவாய்) சக்திவேல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரியில் 50 மைக்ரான் மற்றும் 8க்கு 12 அளவுக்கு குறைவான பாலிதீன் அல்லது பிளாஸ்டிக் பைகள் மற்றும் தட்டுக்களை எந்த ஒரு தனி நபரோ, கடை வைத்திருப்பவரோ, மொத்தமாகவோ அல்லது சில்லரையாகவோ விற்பனை செய்வதோ, அல்லது வியாபாரத்திற்காக சேமித்து வைப்பதோ தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், உபயோகித்தபின் அப்புறப்படுத்தக்கூடிய 8க்கு 12 அளவுள்ள 50 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் கோப்பைகளை உபயோகப்படுத்தக்கூடாது என்று அரசு ஏற்கனவே தடை விதித்துள்ளது.
மேலும் சுற்றுச்சூழல் துறை பலமுறை பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் வணிகர்கள் மற்றும் வியாபாரிகளை அணுகி 50 மைக்ரான் அளவுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அறிவுறுத்தலுக்கு பின்பும் சில வியாபாரிகளும், தனிநபர்களும், வணிக நிறுவனங்களும் மேற்சொன்ன தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்துவதாக புகார்கள் வந்துள்ளன. எனவே 50 மைக்ரானுக்கு குறைவான பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.
எனவே, பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் தனிநபர்களின் பாலிதீன் உபயோகத்தை கண்காணிக்க தனிப்படை ஒன்று வட்டாட்சியர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. அப்போது 50 மைக்ரான் அளவுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் அவ்வாறு உபயோகிப்பவர்கள் தண்டனைக்கு உள்ளாவார்கள்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் சிறை தண்டனை மற்றும் லட்ச ரூபாய்க்கும் மேல் அபராதம் விதிக்கக்கூடும்.
முதல்கட்டமாக புதுச்சேரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இத்தடை அமல்படுத்தப்படுகிறது. அடுத்த கட்டமாக அனைத்து நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து பகுதிகளுக்கும் கட்டாயமாக செயல்படுத்தப்படும் என்று சார்பு ஆட்சியரால் அறிவிக்கப்படுகிறது.
மேலும், சமூக நலனை கருதும் பொதுமக்கள் யாராவது ஏதாவது கடைகளில் 50 மைக்ரானுக்கு குறைவான பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பதையோ, உபயோகிப்பதையோ பார்த்தால் உடனே வட்டாட்சியர்களுக்கு புதுச்சேரி வட்டாட்சியர்& 9751308049, உழவர்கரை வட்டாட்சியர்& 9787407492, சார்பு ஆட்சியர்& 1077(இலவச சேவை) ஆகிய தொலைபேசி எண்களில் தகவல் தெரிவிக்க வேண் டும்.இவ் வாறு அதில் தெரிவித்துள்ளார்.