தினகரன் 28.06.2010
இனாம் கரூர் தாந்தோணி நகராட்சியில் பிளாஸ்டிக் கப்புக்கு தடை
கரூர், ஜூன் 28: கரூர் மாவட்ட அம்பேத்கர் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு சங்கம், மனித உரிமை பாதுகாப்பு சங்கம் செயலாளர் செந்தில் முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
டீக்கடைகள் மற்றும் உணவுபொருள் விற்பனை கடைகளில் பிளாஸ்டிக் கப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை எளிதில் மக்கிப்போகாது. மேலும் மறுமுறை பயன்படுத்தவும் முடியாது.
இந்த பிளாஸ்டிக் கப்புகளினால் சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுகிறது. எனவே, இந்த பிளாஸ்டிக் கப்புகளை தடை செய்யவேண்டும் என நீண்டகாலமாக கோரிக்கை விடுத்ததையடுத்து கரூர் நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து டீக்கடைகளிலும் பிளாஸ்டிக் கப்புகள் பயன்படுத்துவதற்கு தடை விதித்து ஜூன் 1ம் தேதி முதல் தடைவிதிக்கப்பட்டது. இதனையடுத்து டீக்கடைகளில் தற்போது, பேப்பர் கப் அல்லது கண்ணாடி கிளாஸ்களில் தான் டீ வழங்கப்படுகிறது.
கரூர் நகராட்சி எல்லையையொட்டி தாந்தோணி, இனாம் கரூர் நகராட்சி பகுதி உள்ளது. இங்கு இதுபோன்ற தடை இல்லை. எனவே, இந்த நகராட்சி நிர்வாகங்களும் கரூர் நகராட்சியைப்போல தீர்மானம் நிறைவேற்றி பிளாஸ்டிக் கப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.