தினகரன் 29.07.2010
வேலூர் பகுதியில் தடை ஓட்டல், டீ கடைகளில் பிளாஸ்டிக் டம்ளர்கள் பறிமுதல்
வேலூர், ஜூலை 29: வேலூரில் ஓட்டல் மற்றும் டீ கடைகளில் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்களை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர்.
வேலூர் மாநகராட்சி பகுதிகளில் 20 மைக்ரான்களுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை ஓட்டல்கள், டீ கடைகள், திருமண மண்டபங்களில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இந்த தடை உத்தரவு இதுவரை கிடப்பில் இருந்தது.
இந்நிலையில், வேலூர் மாநகராட்சி சுகாதார அலுவலர் டாக்டர் கோவிந்தன் தலைமையில் சுகாதார ஆய்வாளர் கவுரிசுந்தர் மற்றும் அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனையில் இறங்கினர்.
இந்த குழுவினர் புதிய மற்றும் பழைய பஸ் நிலையங்களில் உள்ள டீ கடை, ஓட்டல்களில் அதிரடி ரெய்டு நடத்தினர். இதில், ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள பிளாஸ்டிக் டம்ளர்கள், காலாவதியான மற்றும் உற்பத்தி தேதி அச்சிடாமல் இருந்த 20 மூட்டை குடிநீர் பாக்கெட்டுகள், பழங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
‘வேலூர் மாநகராட்சியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமண மண்டபங்கள், டீ கடைகள், டாஸ்மாக் பார்களில் பிளாஸ்டிக் டம்ளர்கள், ஓட்டல்களில் பிளாஸ்டிக் பேப்பர்கள், கவர்கள் பயன்படுத்தக் கூடாது. தடையை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ரெய்டு தொடர்ந்து நடத்தப்படும்’ என்று மாநகராட்சி சுகாதார அலுவலர் டாக்டர் கோவிந்தன் கூறினார்.