தினகரன் 30.07.2010
மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ நெல்லையில் 3வது நாளாக புகைமண்டலம், மரங்கள் கருகின
நெல்லை, ஜூலை 30: நெல்லை மாநகராட்சி குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால் நேற்று 3வது நாளாக நகரப்பகுதிகளை புகை மண்டலம் சூழ்ந்தது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
நெல்லை அருகே உள்ள ராமையன்பட்டியில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது. சுமார் 20 ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த குப்பை கிடங் கில் கடந்த 27ம் தேதி இரவு திடீரென தீப்பிடித்தது. இதனால் நகரப்பகுதி முழு வதும் புகை மண்டலம் சூழ்ந்தது. 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் மூலம் வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுப்பொருட்களில் தீ பிடித்துள்ளதால் நெல்லை மாநகரப் பகுதியில் நேற்று 3வது நாளாக புகை மண்ட லம் சூழ்ந்தது. மேலும் குப்பை கிடங்கை சுற்றி நடப்பட்டிருந்த ஏராளமான வேம்பு, வாகை, யூக்கலிப்டஸ் மரங்கள் அனைத்தும் தீயில் கருகின.
ராமையன்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மக்களுக்கு புகை மண்டலத்தால் மூச்சுதிணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனர். மூச்சுத்திணறி முத் தாட்சி என்ற மூதாட்டியும் இறந்தார். குப்பை கிடங்கு அருகில் உள்ள பலர் வீடு களை காலி செய்து வெளியேறினர். தொடர்ந்து எழும் புகையை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர்.
இதுகுறித்து மேயர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை:
மாநகராட்சிக்கு சொந்தமான ராமையன்பட்டி உரக்கிடங்கில் கடந்த 27ம்தேதி திடீரென தீப்பிடித்தது. வெளியூரில் இருந்த நான் உடனடியாக கலெக்டருடன் தொடர்பு கொண்டு தீயணைப்பு வண்டிகளை அனுப்பிவைக்க கேட்டுக்கொண்டேன். கலெக்டரும் உடனடியாக நடவடிக்கை எடுத்தார். அதிகாரிகள் தீயை அணைக்கும் முயற்சியில் முழு வீச்சுடன் ஈடுபட்டனர். தீயணைப்பு படையினரின் அயராத முயற்சியால் தீ பெருமளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
காற்று பலமாக சுழன்று அடிப்பதால் தீயை அணைக்க தடங்கல் ஏற்படுகிறது. சம்பவ இடத்தை நான் மண்டல தலைவர்கள், அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டேன். இன்னும் ஓரிரு நாட்களில் முழுமையாக தீ அணைக்கப்படும்.