தினமணி 02.08.2010
பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு பேரணி
தென்காசி, ஆக. 1: குற்றாலத்தில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு பேரணி சனிகிழமை நடைபெற்றது. குற்றாலம் பேருந்துநிலையத்தில் துவங்கிய இப்பேரணியை தமிழக வருவாய்த் துறை அரசு செயலர் கி. தனவேல் கொடியசைத்து துவக்கிவைத்தார்.
பேரணியில் பசுமைப் படையை சேர்ந்த மாணவர்கள், இலஞ்சி ராமசாமிபிள்ளை மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், குற்றாலம் டி.கே.டி. பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் கலந்துகொண்டனர்.
பேரணி குற்றாலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று, பின்னர் பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.
அதைத் தொடர்ந்து குற்றாலம்- ஐந்தருவி சாலையில் வெண்ணைமடை குளம் பகுதியில் குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சி சார்பில் மேற்குத் தொடர்ச்சி மலை சுற்றுலா அபிவிருத்தி திட்டப்பணிகள் திட்டத்தில் ரூ. 3 லட்சம் செலவில் கட்டப்பட்டுளள மலையேறும் பயிற்சியாளர்களுக்கான ஓய்வுக்கூடத்தை கி. தனவேல் திறந்துவைத்தார். விழாவில் குற்றாலம் பேரூராட்சி துணைத் தலைவர் பா. ராமையா, செயல் அலுவலர் கொ. ராஜையா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
குற்றாலம் பகுதியில் சேகரிக்கப்பட்ட ரூ. 86 ஆயிரம் மதிப்பிலான 500 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் திருநெல்வேலி சிமென்ட் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது என செயலர் அலுவலர் கொ. ராஜையா தெரிவித்தார்.