தினமலர் 16.08.2010
ராமேஸ்வரம் தீவில் பாலிதீன் சோதனை
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம், பாம்பன் மற்றும் தங்கச்சிமடம் பகுதி ஓட்டல், மளிகை கடை ,கோழி, இறைச்சி ,காய்கறி, பழக்கடைகளில் ராமேஸ்வரம் தாசில்தார் தலைமையில் பாலிதீன் சோதனை செய்யப் பட்டது. வருவாய் துறை, நுகர்வோர் இயக்கம், விபத்து மீட்டு சங்கத்தினர் உடன் சென்றனர். 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட பாலிதீன், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப்புகள் பறிமுதல் செய்யப்பட்டன. 14 ஆயிரத்து 300 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. சோதனையின்போது அனுமதி இல்லாமல் தயாரிக்கப்பட்ட பாக்கெட் குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப் பட்டது. கலெக்டர் ஹரிகரன் கூறியதாவது: இந்த ஆண்டு இறுதிக்குள் நூறு சதவீதம் பாலிதீன் பயன்பாடற்ற பகுதியாக ராமேஸ்வரம் தீவு விளங்கும். யாத்ரீகர்கள் பாலிதீன் கொண்டு வருவதை தடுக்க விரைவில் மண்டபம் மற்றும் ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷனில் சோதனை மையம் அமைக்கப்படும். தீவின் சுற்றுச்சூழல் நலன்கருதி பாலிதீன், பிளாஸ்டிக் தீவிர ஒழிப்பு நடவடிக்கையில் பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். பயன்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,என்றார்.