தினமலர் 19.08.2010
பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த ஆய்வு! நகராட்சி செயல் அலுவலர் அறிவிப்பு
பந்தலூர் : ""பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த, நகராட்சிப் பணியாளர்கள், வார்டு கவுன்சிலர்களால் ஆய்வு நடத்தப்படும்,'' என, நகராட்சி செயல் அலுவலர் தெரிவித்தார்.நெல்லியாளம் நகராட்சியில் மாதாந்திர கூட்டம் நடத்தப்பட்டது. ஜூலை மாத வரவு 86 ஆயிரத்து 801, செலவு 4 லட்சத்து 90 ஆயிரத்து 826 ரூபாய், ஜூலை மாதம், நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பிறப்பு 12, இறப்பு 7 என தெரிவிக்கப்பட்டது. பந்தலூர் பயணியர் நலச்சங்கம் சார்பில், பயணியர் நிழற்குடையில் பேருந்து கால அட்டவணை வைக்க அனுமதிக்கப்பட்டது.
ஜெயசீலன்: மூச்சிக்குன்னு ஆதிவாசி காலனிக்கு செல்லும் சாலையை சீரமைக்காவிட்டால், போராட்டம் நடத்தப்படும்.
தலைவர் காசிலிங்கம்: பணி மேற்பார்வையாளரால் ஆய்வு செய்து, சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சேகர்: தேவாலா மயானத்துக்கான சிமென்ட் சாலை மேடான பகுதியில் உள்ளதால், மழை காலங்களில் சிரமம் ஏற்படுகிறது; தார் சாலையாக மாற்ற வேண்டும்.
தலைவர்: அதிகாரிகளுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கலாம்.
கோபிநாதன்: தேவாலா மயானம் 65 சென்ட் நிலத்தில் உள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது 5 சென்ட் நிலம் மட்டுமே உள்ளது; நிலத்தை அளந்து, ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.
தலைவர்: வருவாய் துறையினர் மூலம் நில அளவைக்கு நடவடிக்கை எடுக்கலாம்.
துணைத் தலைவர் இப்ராஹிம்: தேவாலா போலீஸ் ஸ்டேஷன் சாலை-பஜார் சாலைப் பகுதிகளில், கால்வாய் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால், பாதசாரிகள் அவதிப்படுகின்றனர்.
செயல் அலுவலர் வேணுகோபால்: பணிக்கான மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது; டெண்டர் விடப்பட்டு பணிகள் துவக்கப்படும்.
ஆறுமுகம்: மாநில எல்லைப் பகுதிகளில் உள்ள வரவேற்பு பலகைகள், பராமரிப்பின்றி உள்ளது; சீரமைக்க வேண்டும்.
தலைவர்: வரவேற்பு பலகைகள் சீரமைக்கப்பட்டு, புதிதாக வாசகங்கள் எழுதி வைக்கலாம்.
பிரகாஷ்: காலனி செல்லும் சாலையோரம், 4 ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்ட கால்வாய் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது குறித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தலைவர்: ஒப்பந்ததாரரிடம் விசாரித்து உடனடியாக முழுமைப்படுத்தப்படும்.
சரோஜாதேவி: பழுதடைந்துள்ள பந்தலூர் காலனி செல்லும் சிமென்ட் சாலையை சீரமைக்க வேண்டும்.
பணி மேற்பார்வையாளர் ஆல்துரை: உடைப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில், சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
சந்திரன்: பந்தலூர் இன்ட்கோ நகர் பகுதியில், 1986ம் ஆண்டு 83 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது; மேடான பகுதியில் உள்ள கிராமத்துக்கு சாலை வசதி ஏற்படுத்தவில்லை.
தலைவர்: சாலை வசதி ஏற்படுத்துவது குறித்து ஏற்பட்ட பிரச்னையை தீர்க்க, மாவட்ட வருவாய் அலுவலரை அணுகலாம். முதற்கட்டமாக, கிராமத்துக்கு நடைபாதை வசதி ஏற்படுத்தலாம்.
""பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த, நகராட்சிப் பணியாளர்கள், வார்டு கவுன்சிலர்களை கொண்டு ஆய்வு நடத்தப்படும். பந்தலூர் பஜாரில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அபராதம் விதிக்கப்படும்,'' என, செயல் அலுவலர் தெரிவித்தார்.