தினகரன் 19.08.2010
கோவில்பட்டியில் செப்.1 முதல் பிளாஸ்டிக் கப் பயன்படுத்த தடை
கோவில்பட்டி, ஆக. 19: கோவில்பட்டி நகராட்சி கமிஷனர் விஜயராகவன் விடுத்துள்ள செய்திகுறிப்பு:
கோவில்பட்டி நகராட்சி பகுதிக்குள் பொதுசுகாதார நலன் கருதியும் பொதுமக்கள் நலன் கருதியும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கப்புகளை பயன்படுத்துவதையும், விற்பனை செய்வதையும் செப்.1ம் தேதி முதல் தடை செய்து நகர்மன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
எனவே பொதுமக்கள், சில்லரை மற்றும் மொத்த விற்பனையாளர்கள், கடை உரிமையாளர்கள் அனைவரும் பொதுமக்கள் நலன்கருதி செப்.1ம் தேதி முதல் சுகாதாரகேடு ஏற்படுத்தும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கப்புகளை பயன்படுத்தவோ, விற்பனை செய்யவோ கூடாது.
இதற்கு மாற்று ஏற்பாடாக எளிதில் மக்கும் தன்மையுள்ள பேப்பர் கப்புகளை பயன்படுத்தவும், விற்பனை செய்ய வேண்டும். தவறினால் நகராட்சி பொது சுகாதார சட்ட விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.