தினமணி 30.08.2010
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் மாநகராட்சி அலுவலர்கள் ஆய்வு
வேலூர், ஆக. 28: வேலூரில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவது குறித்து உணவகங்கள் மற்றும் டீக்கடைகளில் மாநகராட்சி அலுவலர்கள் சனிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
நகர் நல அலுவலர் கோவிந்தன், உணவு ஆய்வாளர் கவுரிசுந்தர், துப்புரவு ஆய்வாளர்கள் சிவக்குமார், முருகன், லூர்துசாமி உள்ளிட்டோர் பழைய பஸ் நிலையம், மக்கான் சந்திப்பு, பழைய பைபாஸ் சாலை, புதிய பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, டீக்கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப்புகள், டம்ளர்கள், பைகள் போன்றவை பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து சுமார் 500 கிலோ எடை கொண்ட பிளாஸ்டிக் பொருள்களை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
மேலும் ஒரு உணவகத்தில் கெட்டுப்போன நிலையில் கோழி இறைச்சி, சமையல் எண்ணெய் போன்றவை இருப்பதை கண்டறிந்து அப்புறப்படுத்தினர்.