தினமலர் 02.09.2010
பிளாஸ்டிக் கேரி பேக் பயன்படுத்த தடை
தஞ்சாவூர்: "தஞ்சை மாவட்டத்தில் கடைகள் உட்பட எந்த இடங்களிலும் பிளாஸ்டிக் கேரி பேக் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதால், மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் விதிப்படி மறு சுழற்சி செய்யப்பட்ட மற்றும் வண்ண நிறத்தில் உள்ள கேரி பேக்களில் உணவுப்பொருட்கள் சேமித்து வைத்தல், பயன்படுத்துதல், விற்பனை செய்தல் தடை செய்யப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல இடங்களில் பல வண்ணங்களில் கேரி பேக்களில் உணவுப்பொருட்கள் சேமித்து வைப்பதும், விற்பனை செய்வது, பயன்படுத்துவதும் நடைமுறையில் இருக்கிறது. குறிப்பாக, மாமிச உணவு வகைகள் விற்பனை செய்யும் இடங்களில் இத்தகைய கேரி பேக்கள், குறிப்பாக கறுப்பு வண்ண பை அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இனி வரும் காலங்களில் வண்ண நிற கேரி பேக்களில் உணவுப்பொருட்கள் சேமித்து வைப்பது, பயன்படுத்துவது, விற்பனை செய்வது அறியப்பட்டால் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், உணவுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்படும், என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.