தினமணி 28.09.2010
பிளாஸ்டிக் பொருள்கள் அழிப்பு
பழனி, செப். 27: பழனியில் நகராட்சி சார்பில் விதிமுறை மீறிய பிளாஸ்டிக் பொருள்கள் கைப்பற்றி அழிக்கப்பட்டன.
பழனி நகராட்சி சார்பில் துப்புரவு ஆய்வாளர்கள், சுகாதாரத் துறையினர் நகராட்சிப் பணியாளர்களுடன் பழனி பஸ் நிலையம், மார்க்கெட், அடிவாரம் உள்ளிட்ட பல பகுதிகளில் திங்கள்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, பழனியில் பல்வேறு பகுதிகளிலும் விதிமுறை மீறி விற்கப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள், கப்புகளைக் கைப்பற்றி பெரியப்பா நகரில் உள்ள உரக் கிடங்குக்குக் கொண்டு சென்று அழித்தனர்.
கடைகளில் பிளாஸ்டிக் பொருள்களைக் கைப்பற்றுவதைத் தவிர்த்து, இப் பொருள்களை மொத்தமாக விற்கும் குடோன்களைக் கண்காணித்து அங்கு கைப்பற்றினால் இச்செயல்களைத் தவிர்க்கலாம் என பொதுமக்கள் தெரிவித்தனர்