தினகரன் 04.10.2010
நந்திவரம் பெரிய ஏரியில் குப்பை கொட்டுவதால் கிணற்று நீர் பாதிப்பு
கூடுவாஞ்சேரி, அக்.4: நந்திவரம் & கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கிருந்து தினமும் 3 டிராக்டர்கள், 3 மின் ஆட்டோக்கள், 18 மூன்று சக்கர சைக்கிள்கள் மூலம் தினமும் 3 முதல் 4 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன.
3 சக்கர வாகனங்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் நெல்லிக்குப்பம் சாலை, கற்பகாம்பாள் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கொட்டப்படும். பின்னர், டிராக்டர்கள் மூலம் எடுத்து சென்று நந்திவரம் பெரிய ஏரியில் கொட்டப்படுகிறது. இதனால் ஏரியின் அருகேயுள்ள நாராயணபுரம், மகாலட்சுமி நகர், அம்சா நகர், நந்திவரம் காலனி, பெரியார் நகர் உட்பட பகுதிகளில் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘’நந்திவரம் பெரிய ஏரியில் குப்பை கொட்டுவதை தடுக்க கோரி, கடந்த சில வாரங்களுக்கு முன் கூடுவாஞ்சேரியில் நடந்த மனுநீதி நாளில், கலெக்டரிடம் மனு கொடுத்தோம். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏரியில் உள்ள குப்பைகளால், அருகில் உள்ள கிணற்று நீர் பாதிக்கும் அபாயம் உள்ளது.
ஏரியின் பரப்பளவு குறைந்து, ஆக்கிரமிப்பு அதிகரிக்கும் நிலை உள்ளது. குப்பை கொட்டுவதை நிறுத்த ஓரிரு நாளில் நடவடிக்கை எடுக்காவிட்டால், குப்பை கொட்ட வரும் டிராக்டர்களை மறித்து போராட்டம் நடத்துவோம்" என்றனர். நந்திவரம்&கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் நந்திவரம் பெரிய ஏரியில் கொட்டப்படுகிறது. இதனால், ஏரியே குப்பை மேடாக காட்சி அளிக்கிறது.