Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

எரிப்பதால் சுவாசக் கோளாறு குப்பை கிடங்கு மலை மேடானது

Print PDF

தினகரன் 05.10.2010

எரிப்பதால் சுவாசக் கோளாறு குப்பை கிடங்கு மலை மேடானது

ஆவடி, அக். 5: அம்பத்தூர் நகராட்சியில் மொத்தம் 52 வார்டுகள். இங்கு, அம்பத்தூர், அத்திப்பட்டு, அம்பத்தூர் எஸ்டேட், மண்ணூர்பேட்டை, பட்டரைவாக்கம், கொரட்டூர், பாடி, முகப்பேர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதிகளில் தினமும் 300 டன் குப்பை சேருகின்றன. இவற்றை நகராட்சி மற்றும் தனியார் துப்புரவு ஊழியர்கள் சேகரித்து, அம்பத்தூர்&வானகரம் சாலையில் உள்ள கே.கே.நகர் குப்பை கிடங்கில் கடந்த 20 ஆண்டுகளாக கொட்டி வருகின்றனர்.

தொடக்கத்தில் 10 அடி பள்ளத்தில் இருந்த குப்பை கிடங்கு, தற்போது 60 அடிக்கு மேல் உயர்ந்து மலைபோல் காட்சி அளிக்கிறது. 10 லட்சம் டன்னுக்கும் மேலான குப்பை கொட்டப்பட்டுள்ளன. அளவுக்கு அதிகமாக குப்பை நிரம்பியிருப்பதால், குப்பை கொட்ட இடமில்லாமல் நகராட்சி திணறி வருகிறது. இதற்கு மாற்று இடமாக ஆவடி சேக்காடு பகுதியில் 10 ஏக்கர் நிலத்தை நகராட்சி நிர்வாகம் வாங்கியது. ஆனால், அங்கு குப்பை கொட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், அந்த இடம் பயனற்று கிடக்கிறது. இதனால், மீண்டும் மீண்டும் குப்பை தற்போதைய கிடங்கிலேயே கொட்டப்படுகிறது.

இங்குள்ள குப்பைக் கிடங்கில் சிலர் தீ வைத்து விடுகின்றனர். இதனால், சுற்றுப்புற பகுதிகளான கே.கே.நகர், டி.ஜி. அண்ணாநகர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு 3, கலைவாணர் நகர், ஐசிஎப் காலனி, எம்ஜிஆர் புரம் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

குப்பையை எரிப்பதால், அதிலிருந்து வரும் புகையால் சுவாசக் கோளாறு ஏற்படுவதுடன், நுரையீரல் தொடர்பான நோய்களாலும் மக்கள் அவதிப்படுகின்றனர். நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் உள்ள கிணறுகளில் தண்ணீர் நுரை கலந்த கறுப்பு நிறத்தில் மாறிவிட்டது. இதனால் நீரை பயன்படுத்த முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். இதுதொடர்பாக, பொதுமக்கள் பலமுறை புகார் கூறியும் நகராட்சி அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆகவே, குப்பை கிடங்கில் உள்ள குப்பையை எரிக்காமல் இருக்கவும், எரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குப்பை கிடங்குக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபற்றி நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "பூந்தமல்லி அருகே குத்தம்பாக்கம் பகுதியில் குப்பை கொட்ட இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதற்கான வேலைகள் விரைவில் தொடங்க இருக்கின்றன. அந்த பணிகள் முடிந்ததும், இங்குள்ள கிடங்கில் குப்பை கொட்டப்படாது. இங்குள்ள குப்பைகளும் படிப்படியாக அகற்றப்படும்" என்றனர். அம்பத்தூர் & வானகரம் சாலையில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கு.