தினமணி 06.10.2010
பெரியகுளத்தில் பிளாஸ்டிக் பொருள்களை வரும் 15 முதல் பயன்படுத்தத் தடை
பெரியகுளம், அக். 5: பெரியகுளத்தில் வரும் 15-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பைகள், கேரி பேக்குகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தத் தடைவிதிப்பது என, நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) என். மோனி தலைமை வகித்தார். சுகாதார ஆய்வாளர்கள் எஸ். அகமது கபீர், டி. ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், உணவகங்கள், மளிகைக் கடை, டீ கடை உள்ளிட்ட வர்த்தக நிறுவன உரிமையாளர்கள் கலந்துகொண்டனர். அப்போது, நகராட்சிப் பகுதியில் உள்ள அனைத்து விதமான வர்த்தக நிறுவனங்களிலும் வரும் 15-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தக் கூடாது. மேலும், விற்பனை செய்யவும் கூடாது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
எனவே, இதனை மீறி பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டால், அவற்றை பறிமுதல் செய்வதோடு, அபராதமும் விதித்து சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று, ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.