Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

இயற்கை இடர்பாடுகளின் பாதிப்பை குறைக்க நடவடிக்கை: சென்னை மேயர்

Print PDF

தினமணி              28.10.2010

இயற்கை இடர்பாடுகளின் பாதிப்பை குறைக்க நடவடிக்கை: சென்னை மேயர்

சென்னை, அக்.28: சென்னை மாநகராட்சியி்ன் கட்டுப்பாட்டில் உள்ள 10 மண்டலங்களில் இயற்கை இடர்ப்பாடுகளை எதிர்கொள்ள விழிப்புணர்வு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மேயர் மா.சுப்ரமணியன் தென்கொரிய மாநாட்டில் தெரிவித்தார்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தென்கொரியாவில் இன்சியான் நகரில் இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்புக்களை குறித்த பல்வேறு மாநகர்களின் மேயர்கள் கலந்துகொண்ட மாநாடு நடைபெற்றது. இதில் இந்தியாவின் சார்பில் சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டார்.

மாநாட்டில் இயற்கை இடர்பாடுகள் எதிர்கொள்ள எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து மேயர் பேசியதாவது:

சென்னை மாநகரம் வளர்ந்து வரும் மிகப்பெரிய நகரமாகும். ஏராளமான தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் சென்னை மாநகருக்கு பெருமை சேர்த்து வருகின்றன. சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள 10 மண்டலங்களில் 155 வார்டுகள் உள்ளடக்கியுள்ளன. ஒவ்வொரு வார்டிலும் ஒரு மன்ற உறுப்பினர் பொதுமக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர். சென்னை மாநகராட்சிக்கு கிடைக்கப் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் மண்டல அளவில் குழுக்கள் ஏற்படுத்தி, அதில் பொதுமக்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள் கலந்து கொண்டு இயற்கை இடர்பாடுகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது.

கிராமப்புற மக்களுக்கு இயற்கை இடர்பாடுகள் குறித்து பயனளிக்கக் கூடிய தகவல்கள் வழங்கப்படுகிறது. நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, தகுந்த மாற்று இடம் வழங்கப்பட்டுள்ளது.

மும்பையைப் போன்றே சென்னை மாநகரும் குடிசைப் பகுதிகளால் பிரச்னைகளை எதிர்நோக்கி வருகிறது. ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புர புனரமைப்பு திட்டத்தின் கீழ் குடிசை மக்களின் வாழ்க்தைத் தரத்தை மேம்படுத்திட குடியிருப்புகள், அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்படுகிறது. சென்னை மாநகரின் குடிநீர் பற்றாக்குறையினை போக்க கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சென்ற ஆகஸ்ட் திங்கள் 19ம் தேதி அன்று பாதுகாப்பான சென்னைவிழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சென்னை மாநகராட்சி, சென்னை பல்கலைக்கழகத்துடனும், கியோட்டோ பல்கலைக்கழகத்துடனும் இணைந்து இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்புக்களை குறைப்பது தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளை கோட்ட அளவில் மேற்கொண்டு வருகிறது என மேயர் தெரிவித்ததாக மாநகராட்சி செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.