தினமலர் 08.11.2010
ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் சேகரித்து விற்க நுகர்வோருக்கு "அட்வைஸ்'
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் யூஸ் அன்ட் த்ரோ போன்ற பிளாஸ்டிக் பொருட்களை விலைக்கு வாங்க உள்ளாட்சி அமைப்புகள் தயாராக உள்ளதாக மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலகம் அறிவித்துள்ளது. அந்த அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: புதுக்கோட்டை மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக "யூஸ் அன்ட் த்ரோ' போன்ற பிளாஸ்டிக் பொருள் பயன்பாட்டுக்கு ஏற்கனவே தடைவிதிக்கப்பட்டிருந்தது. இதன்மூலம் மாவட்டத்தில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு ஓரளவு குறைந்திருந்தது. தடை நீடித்துவரும் நிலையில் தற்போது இவற்றின் பயன்பாடு அதிகரித்துள்ளது. புதுக்கோட்டை நகரில் திரும்பும் பக்கமெல்லாம் இவற்றை காண முடிகிறது. குறிப்பாக வடிகால்கள் மற்றும் நீர்நிலைகள் "யூஸ் அன்ட் த்ரோ' போன்ற பிளாஸ்டிக் பொருட்கள் குவிந்துவருகிறது.
இவற்றால் நீர்நிலைகள் மாசுபடுவதோடு, சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கும் நிலை உள்ளது. "யூஸ் அன்ட் த்ரோ' போன்ற மறு சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களை சிமென்ட் தொழிற்சாலைகள் எரிபொருளாக உபயோகித்து வருகிறது. இவற்றை விலைக்கு வாங்கவும் சிமென்ட் ஆலைகள் முன்வந்துள்ளது. எனவே, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் "யூஸ் அன்ட் த்ரோ' போன்ற பிளாஸ்டிக் பொருட்களை வெளியே வீசாமல் அவற்றை சேகரித்து அருகில் உள்ள நகராட்சி, டவுன் பஞ்சாயத்து மற்றும் கிராமப் பஞ்சாயத்து அலுவலகங்களில் விற்பனை செய்யலாம். இதற்கு கிலோ ஒன்றுக்கு ஒரு ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்களை கண்ட, கண்ட இடங்களில் வீசாமல் அவற்றை சேகரித்து உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்க அனைவரும் முன்வரவேண்டும்.