Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்க அரசு சட்டம் நிறைவேற்ற வேண்டும் தமிழகம் முழுவதும் ஐகோர்ட் கிளை உத்தரவு

Print PDF

தினகரன்            11.11.2010

பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்க அரசு சட்டம் நிறைவேற்ற வேண்டும் தமிழகம் முழுவதும் ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை, நவ. 11: தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பை களை பயன்படுத்த தடை விதிக்க அரசு சட்டம் கொண்டு வர வேண்டும் என ஐகோர்ட் கிளை கூறியுள்ளது. மதுரையில் பொது இடத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிக்கப்பட்டிருந்தது தொடர்பாக நாளிதழ்களில் செய்திகள் வெளியானது. இதை ஐகோர்ட் கிளை தாமாக முன் வந்து பொதுநல வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. மனுவை நீதிபதிகள் பானுமதி, நாகமுத்து விசாரித்தனர். அவர்கள் பிறப்பித்த உத்தரவு:

தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்க அரசு, தமிழ்நாடு மட்காத குப்பை சட்டம் (கட்டுப்படுத்தல்) நிறைவேற்றி, அதனை தீவிரமாக அமல்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பேக்கிங் பொருட்களால் சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவது குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழுவை மாநில அரசு அமைக்க வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் பிளாஸ்டிக், பாலிதீன் பைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை பின்பற்றி பிற மாவட்டங்களிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கவும், பிளாஸ்டிக் பைகளை தடை செய்யவும் மறுசுழற்சி பிளாஸ்டிக் தயாரிப்பு மற்றும் பயன்படுத்தல் விதியின் கீழ் மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்குகள் குறித்து மக்கள் மத்தியில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அனுமதி பெறாமல் இயங்கும் பிளாஸ்டிக் மறுசுழற்சி யூனிட்டுகளை மூட மாசு கட்டுப்பாட்டு வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அனுமதியுடன் செயல்படும் யூனிட்டுகளில் மறுசுழற்சி பிளாஸ்டிக் தயாரிப்பு மற்றும் பயன்பாடு விதி தீவிரமாக அமல்படுத்தப்படுகிறது என்பதை உறுதி செய்ய வேண்டும். அந்த விதியை மீறி செயல்படுவோர் மீது மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.