தினகரன் 11.11.2010
பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை காரைக்குடி நகராட்சியில் முழுவீச்சில் அமல்
காரைக்குடி, நவ. 11: காரைக்குடி நகராட்சியில் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை முழுவீச்சில் அமல்படுத்தப்பட உள்ளது. மீறி பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி தலைவர் முத்துத்துரை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
காரைக்குடி நகராட்சியில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் பைகள், கப்புகள், கேரி பேக், உணவு தட்டுகளை பயன்படுத்திவிட்டு கண்ட இடங்களில் வீசிவிடுகின்றனர். இவை மக்கும் தன்மை இல்லாதவை என்பதால், மழைநீரை நிலத்திற்குள் செல்லவிடாமல் தடுக்கின்றன. பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்வதும் கடினம். இதனை விலங்குகள் உண்பதால் அவற்றின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது.
நகராட்சியின் அழகை பராமரிக்கவும், சுகாதாரத்தை பாதுகாக்கவும் பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள் பயன்படுத்த கூடாது. நகராட்சிக்கு உட் பட்ட ஓட்டல்கள், டீ கடை கள், மளிகை கடைகள் உட் பட அனைத்து நிறுவனங்களிலும் கேரி பேக் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கடந்த மாதம் முதல் தடைவிதிக்கப்பட்டது. இது 80 சதவீதம் வரை நடைமுறைக்கு வந்துள்ளது. பண்டிகை நேரம் என்பதால் சற்று காலம் தாழ்த்தப்பட்டு, தற்போது முழுவீச்சில் பிளாஸ்டிக் பொருள் ஒழிப்பு நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சுற்றுலா தலங்களை தவிர மற்ற நகராட்சிகளுக்கு முன்னுதாரணமாக இங்கு தடை அமல்படுத்தப்படுகிறது. தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்வோருக்கு ரூ.5 ஆயிரமும், மொத்த விற்பனையாளர்களுக்கு ரூ.2 ஆயி ரத்து 500, சில்லரை விற்பனையாளர்களுக்கு ரூ.750 வீதம் அபராதம் விதிக்கப்படும். பிளாஸ்டிக் பொருட் களை உபயோகிப்பவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும். இதற்கு பொதுமக்கள் முழு அதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.