Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பிளாஸ்டிக் பொருள்கள் தடை மசோதாவை சட்டமாக்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

Print PDF

தினமணி               11.11.2010

பிளாஸ்டிக் பொருள்கள் தடை மசோதாவை சட்டமாக்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

மதுரை, நவ. 10: பிளாஸ்டிக் பொருள்கள் தடை மசோதாவை சட்டமாக்க அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியது.

இதுகுறித்த வழக்கு விவரம்:

மதுரை மேலவாசலில் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் வகையில் பிளாஸ்டிக் கழிவுகள் பொது இடத்தில் குவிக்கப்பட்டிருந்ததை, நாளிதழ் ஒன்று படத்துடன் செய்தியாக வெளியிட்டது. இதை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தானே முன்வந்து வழக்காக எடுத்துக்கொண்டது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இதையடுத்து, அந்தக் கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்திய பின்னர் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, பிளாஸ்டிக் (பாலித்தீன்) கழிவுகளால் மாநிலத்தில் பல இடங்களில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வருகிறது. இதைத் தடுக்கும் வகையில் பிளாஸ்டிக் தடைச் சட்ட மசோதா தொடர்பாக அரசிடம் விளக்கம் பெற நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து நீதிபதிகள் ஆர்.பானுமதி, எஸ்.நாகமுத்து ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:

மக்காத குப்பைகள் தடுப்புச் சட்டம் 2010-ஐ கொண்டுவருவது குறித்து அரசு துரிதமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் பிளாஸ்டிப் பொருள்கள் பயன்பாட்டினால் ஏற்படும் சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்துக் கண்டறியவும், அதைக் கட்டுப்படுத்துவது தொடர்பான வழிமுறைகளைக் கண்டறிவது குறித்தும் ஒரு நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என இந்த நீதிமன்றம் கருதுகிறது.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர், பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக எடுத்த நடவடிக்கைகளை அனைத்து மாவட்ட நிர்வாகமும் கடைப்பிடிக்கலாம்.

2003-ம் ஆண்டு பிளாஸ்டிக் மறுசுழற்சி மற்றும் பயன்பாட்டுச் சட்டத்தை ஆட்சியர்கள் செயல்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் விளைவுகள் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை ஊடகங்கள் மூலம் மேற்கொள்ள வேண்டும்.

மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதியுடன் செயல்படும் பிளாஸ்டிக் மறுசுழற்சி நிறுவனங்கள் 1999-ம் ஆண்டு விதிகளைப் பின்பற்றுகின்றனவா என கண்காணித்து, விதியை மீறும் நிறுவனங்கள் மீது சட்டத்துக்குள்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர், மாவட்ட நிர்வாகம், சுற்றுச்சூழல் துறையினருடன் இணைத்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.