தினமலர் 20.11.2010
சபரிமலையில் பிளாஸ்டிக் தடைஐகோர்ட் உத்தரவு படி நடவடிக்கை
சபரிமலை: கேரள ஐகோர்ட் உத்தரவு படி சபரிமலையில் பிளாஸ்டிக் தடை உத்தரவு கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் படி 30 மைக்ரான்களுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் எல்லா ஆண்டும் சீசன் காலத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. ஆனால் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவதால் அதை அமல்படுத்துவதில் பல சிரமங்கள் இருந்து வருகிறது. குறிப்பாக பக்தர்கள் குடிநீருக்காக பயன்படுத்தும் மினரல் வாட்டர் பாட்டில்கள், வழிபாடுக்காக கொண்டு வரும் பிளாஸ்டிக் குப்பிகள் மலை போல் குவிவதால் அதை அழிப்பதில் பல சிரமங்கள் இருந்து வருகிறது. மகரவிளக்கு சீசனில் குவியும் குப்பைகளை அகற்ற முடியாலல் அது வனத்தில் தேங்குகிறது. இதனால் சபரிமலை வனம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.
இதை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு பிளாஸ்டிக் தடையை கடுமையாக அமல்படுத்த கேரள ஐகோர்ட் தேவசம்போர்டுக்கு உத்தரவிட்டுள்ளதால் 30 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் மத்தியில் இது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எருமேலி, பம்பை போன்ற இடங்களில் குளியல் நடத்தும் பக்தர்கள் சோப்பு, ஷாம்பு போன்ற பொருட்களின் பிளாஸ்டிக் கவர்களை தூக்கி வீசாமல் அதற்காக வைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் மட்டுமே போட வேண்டும் என்று கேட்டுக்கொளப்பட்டுள்ளார்கள். சபரிமலை வரும் பக்தர்கள் முழுமையாக பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து காடுகளை பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு கேட்டுக்கொண்டுள்ளது.