Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடை ஆட்சியர் அறிவிப்பு

Print PDF

தினகரன்                08.12.2010

பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடை ஆட்சியர் அறிவிப்பு

நாமக்கல், டிச.8: நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது கட்டுப்படுத்துதல் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு தலைமை வகித்து, மாவட்ட ஆட்சியர் மதுமதி பேசியதாவது:

மாவட்டத்தில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், பழ விற்பனை அங்காடிகள், மற்றும் காய்கறி விற்பனை அங்காடிகளில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் கருப்பு பாலிதின் பைகள் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

மளிகை கடைகள், பழ அங்காடிகள், உணவு விடுதிகள் மற்றும் இதர வகை நிறுவனங்களில் இருந்து பொதுமக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கும் போது கருப்பு பாலிதின் மற்றும் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தப்படுகிறது.

இது போன்ற பிளாஸ்டிக் பைகள் மிகவும் நச்சுத் தன்மை வாய்ந்ததாகும். எனவே இதை பயன்படுத்தக் கூடாது. பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். 20 மைக்ரானுக்கு குறைவான திறன் கொண்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது. கடைகளுக்கு உணவுப் பொருட்களை வாங்க செல்லும் பொதுமக்கள் தங்கள் இல்லங்களில் இருந்து துணிப் பைகள், சணல் பைகளை எடுத்துச் செல்ல வேண்டும். நச்சுத் தன்மை வாய்ந்த பிளாஸ்டிக் பைகள், கருப்பு பாலிதின் கவர்கள், மாவட்டங்களில் உற்பத்தி செய்யவோ, அதை பயன்படுத்தவோ கூடாது. அதற்கு முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது.

நகராட்சி, பேரூராட்சி மற்றும் சிறு நகரங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் கண்காணிக்கவேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் மதுமதி தெரிவித்தார்.