தினமணி 08.12.2010
நாமக்கல் மாவட்டத்தில் பிளாஸ்டிக் கவர்களுக்கு தடை
நாமக்கல், டிச. 7: நாமக்கலில் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தவும், உற்பத்தி செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் சோ.மதுமதி கூறினார். தடையை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை கட்டுப்படுத்துவதற்கான ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியர் பேசியது:
வணிக நிறுவனங்கள், காய்கறி விற்பனை அங்காடிகளில் பாலிதின் கவர்கள் பயன்படுத்தப்படுவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். பிளாஸ்டிக் பைகள் நச்சுத் தன்மை கொண்டது. எனவே, 20 மைக்ரானுக்கு குறைவான திறன் கொண்ட பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தக் கூடாது.
கடைகளுக்கு செல்லும் பொதுமக்கள், தங்கள் வீடுகளில் இருந்து துணி, சணல் பைகளை எடுத்துச் செல்ல வேண்டும். நச்சுத் தன்மை கொண்ட பிளாஸ்டிக் பைகள், கருப்பு பாலிதின் கவர்களை மாவட்டத்தில் உற்பத்தி செய்யவோ, பயன்படுத்தவோ கூடாது என தடை விதிக்கப்படுகிறது.
நகராட்சி, பேரூராட்சி, கிராமங்களில் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தப்படுகிறதா என நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். தடையை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஆட்சியர் சோ.மதுமதி.