தினகரன் 15.12.2010
பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க கடைகளுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ்
பள்ளிபாளையம்,டிச.15: சுற்றுசூழலுக்கு கேடுவிளைவிக்கும் பிளாஸ்டிக் பொருள்கள் பைகளை பயன்படுத்த கூடாது என அறிவித்து பள்ளிபாளையம் நகராட்சி பகுதியில் உள்ள 300 கடைகளுக்கு நகராட்சி நிர்வாகம் நோட்டீசு வினியோகித்துள்ளது.
ஒரு முறை பயன்படுத்தி வீசி எறியப்படும் பிளாஸ்டிக் தட்டுகள், கப்புகள், 20 மைக்ரான் அளவுக்கு அதிகமான பைகள் போன்றவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பொருள்களை பயன்படுத்துவதால் சுற்றுசூழல் கெடுகிறது. நிலத்தடி நீர் வளம் பாதிக்கப்படுகிறது. வண்ணம் கலந்த பைகள் மறுசுழற்சி முறையில் தயாரிக்கப்படுவதால் இவற்றில் உணவு பொருள்கள் வழங்குவதால் உடல் நலன் பாதிக்கிறது. எனவே பிளாஸ்டிக் பைகள் தட்டுகள் போன்றவற்றை பயன்படுத்த கூடாது என்பதை வலியுத்தி பள்ளிபாளையம் நகராட்சி பகுதியிகளில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்களில் நகராட்சி நிர்வாகம் நோட்டீசு வழங்கி வருகிறது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தினால் அவை அனைத்தும் பறிமுதல் செய்யப்படும். சுற்று சூழலை கெடுப்பதாக கருதி வழக்கு தொடுக்கப்படும் என நோட்டீசில் எச்சரிக்கப்பட்டுள்ளது. நகராட்சி செயல் அலுவலர் துரைசாமி தலைமையில் சுகாதார அதிகாரிகள் 300 க்கும் மேற்பட்ட கடைகளுக்கு இந்த எச்சரிக்கை நோட்டீசு வழங்கி ஒப்புதல் பெற்றுள்ளனர். இன்னும் ஒரு சில நாட்களில் கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டு பிளாஸ்டிக்பொருள்கள் பறிமுதல் செய்யப்படும் என செயல் அலுவலர் தெரிவித்தார்.