தினமலர் 31.12.2010
"கேரிபேக்' விற்பனையா 100 கடைகளில் சோதனை : நாளை முதல் மதுரையில் தடை
மதுரை : மதுரை நகரில் 20 மைக்ரான் தடிமனுக்கு கீழ் உள்ள "கேரிபேக்குகள்' விற்கப்படுகிறதா என, பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள், பிளாஸ்டிக் கப் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் கடைகளில் சோதனை நடத்தினர். மதுரை மாநகராட்சி பகுதிகளில், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் 20 மைக்ரான் தடிமனுக்குஉட்பட்ட கேரிபேக்குகளை விற்பதற்கான தடை நாளை முதல் அமலுக்கு வருகிறது.
இது தொடர்பாக, நேற்று முன் தினம் மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டினை சங்கத் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நிர்வாகிகள் சந்தித்து என்னென்ன பொருட்களை தடைசெய்ய முடியும் என்பது குறித்து விளக்கம் அளித்தனர். பின், கடைகளில் சங்க நிர்வாகிகள் சோதனை நடத்தினர். இதில், தடைசெய்யப்பட்ட ஐந்து கிலோ கேரிபேக் பறிமுதல் செய்யப்பட்டது. ராதாகிருஷ்ணன் கூறுகையில், ""இதுவரை 100 கடைகளில் சோதனை நடத்தியுள்ளோம். தடைசெய்த கேரிபேக்குகளை விற்கக்கூடாது என, ஏற்கனவே கடை உரிமையாளர்களிடம் உறுதிமொழி பத்திரம் எழுதி வாங்கியுள்ளதால், நகரில் 20 மைக்ரான் தடிமனுக்குட்பட்ட கேரிபேக் விற்பது கிடையாது. பறிமுதல் செய்த கேரிபேக்கை, கம்பெனிகளுக்கே திருப்பி அனுப்பும்படி அறிவுறுத்தி உள்ளோம்,'' என்றார்.