தினமணி 01.09.2009
வேலூரில் பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை
வேலூர், ஆக. 31: வேலூரில் மாநகரப் பகுதியில் பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படும்; இது செப்.11 முதல் அமலுக்கு வரும் என்று மாமன்றக் கூட்டத்தில் மேயர் ப. கார்த்திகேயன் அறிவித்தார்.
வேலூர் மாமன்றக் கூட்டம் மேயர் ப. கார்த்திகேயன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் மதிமுக உறுப்பினர்கள் கோபி, நீதி ஆகியோர் "சுற்றுச்சூழல் பாதிப்பையும், சுகாதாரக் கேட்டையும் உருவாக்கும் பிளாஸ்டிக் டம்ளர்கள், பைகள் போன்றவற்றுக்கு சென்னை, உதகை, புதுக்கோட்டை மாநகராட்சிகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போல் இங்கும் தடை விதிக்க வேண்டும்' என்று வலியுறுத்தினர்.
இதற்கு பதிலளித்த மேயர், "வேலூரிலும் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்த தடைவிதிக்கப்படும். டீ கடை, ஹோட்டல்களில் பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் தடைவிதிக்கப்படும். செப்டம்பர் 10-ம் தேதிக்குள் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். அதையும் மீறி பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
இந்த உத்தரவு தொடர்பாக மாநகர சுகாதார ஆய்வாளர் பிரியம்வதா கூறியது:
அனைத்து பகுதிகளிலும் 21 மைக்ரான் அளவுக்குக் கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தக்கூடாது என ஏற்கெனவே அரசு அறிவித்துள்ளது. வேலூர் மாநகர எல்லைக்குள் அமல்படுத்த மேயர் அறிவுறுத்தியுள்ளார்.
இதன்படி, 21 மைக்ரான் அளவுக்குக் கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தக்கூடாது. முறையாக அறிவிப்புகள் வெளியிடவும், பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.