Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சென்னை நகர மரங்களின் எண்ணிக்கை : ஜூலையில் கணக்கெடுப்பு துவங்குகிறது

Print PDF

தினமலர் 28.06.2011

சென்னை நகர மரங்களின் எண்ணிக்கை : ஜூலையில் கணக்கெடுப்பு துவங்குகிறது

நாட்டில் உள்ள பெருநகரங்களில், முதல் முறையாக சென்னையில் மரங்கள் குறித்த ஒரு கணக்கெடுப்பை நடத்த வனத்துறை திட்டமிட்டுள்ளது. ஜூலை மாதம் துவக்கப்படவுள்ள இந்த கணக்கெடுப்பிற்காக, கல்லூரிகள், பள்ளிகளுக்கு வனத்துறை சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இது குறித்து, சென்னை மாநகர மரங்கள் கணக்கெடுப்பு திட்ட ஆலோசகர், நரசிம்மன் கூறியதாவது: சென்னையில் குறைந்த வகையான மரங்கள் மட்டுமே உள்ளன என்ற தோராயமான பட்டியல் மட்டுமே உள்ளது. புதிய கணக்கெடுப்பில் எத்தனை வகையான மரங்கள் உள்ளன; அவற்றின் எண்ணிக்கை; மரத்தின் சுற்றளவு மற்றும் உயரம்; மரத்திற்கு உள்ள பிரச்னை; பயனில்லாத மரங்கள்; பட்டுபோய்விட்ட மரங்கள்; பழமை வாய்ந்த மரங்கள்; மரக்கன்றுகளை நடவேண்டிய இடங்கள்; கண்ட இடத்தில் உள்ள மரங்கள் உள்ளிட்ட விவரங்கள் தெரியவரும். புள்ளி விவரங்கள் வனத்துறைக்கு மட்டுமின்றி வருங்கால சந்ததியினருக்கும் வசதியாக இருக்கும். கணக்கெடுப்பை கொண்டு, மரங்கள் இல்லாத இடத்தில், பயனளிக்கக்கூடிய மரக்கன்றுகளை நட்டு, சென்னையில் மரங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தலாம். தேவையில்லாத இடங்களில் மரக்கன்றுகள் நடப்படுவதை தவிர்க்க முடியும்.

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் ராஜ்பவனில் மட்டும் 121 வகையான நான்காயிரத்து 371 மரங்கள் இருப்பது தெரியவந்தது. வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில், இந்த கணக்கெடுப்பு துவக்கப்பட்டு, ஆறு மாதத்திற்குள் முடிக்கப்படும். இவ்வாறு நரசிம்மன் கூறினார். கணக்கெடுப்பில் பங்குபெறவுள்ள, "தி நேச்சர் டிரஸ்ட்' அமைப்பின் திருநாரணன் கூறும்போது, "மரங்கள் கணக்கெடுப்பு புள்ளி விவரங்கள் வரும் கால நிர்வாகத்திற்கு வசதியாக இருக்கும். விலங்குகள் கணக்கெடுப்பு போல, மரங்கள் கணக்கெடுப்பு தொடர் பணியாக இருக்க வேண்டும். இதன் மூலம் மரங்கள் வெட்டப்பட்டாலோ, இயற்கை சீற்றத்தால் மரங்கள் பட்டுப்போய்விட்டாலோ மீண்டும் மரக்கன்றுகளை நட முடியும். மரங்களின் முக்கியத்துவம் குறித்து, இந்த கணக்கெடுப்பு மூலம் விழிப்புணர்வு ஏற்படும்' என்றார்.