தினமணி 27.07.2012
பிளாஸ்டிக் பைகள் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்
அவிநாசி, ஜூலை 26: திருமுருகன்பூண்டி பேரூராட்சியில் பிளாஸ்டிக் பைகளை ஒழிப்பது குறித்த விழிப்புணர்வுக் கூட்டம், காமாட்சியம்மன் திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருமுருகன்பூண்டி பேரூராட்சி செயல் அலுவலர் நந்தகோபால் தலைமை வகித்தார். "ஹேண்ட் அன்ட் ஹேண்ட்' தொண்டு நிறுவனம் சார்பில், சுற்றுச்சூழல் மாசுபடுவதால் ஏற்படும் தீமைகளையும், பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் குறும்படம் மூலமாக விளக்கப்பட்டது.
பிளாஸ்டிக் பைகளை அரசு விதிமுறைகளை மீறி பயன்படுத்தும் கடைகளுக்கு அபராதமும், நீதிமன்ற நடவடிக்கையும் எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது.இதில் பேக்கரி, உணவகம், டீ கடைகள், மளிகை வியாபாரிகள், சிறு வியாபாரிகள், திருமண மண்டப உரிமையாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.