மாலை மலர் 28.07.2012
சென்னையில் தடை செய்யப்பட்ட 18 டன் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்: மாநகராட்சி நடவடிக்கை
சென்னை, ஜூலை 28-சென்னையில் 40 மைக் ரான் அளவுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகளை விற்க கூடாது என்று மாநகராட்சி தடை செய்துள்ளது. இது தொடர்பாக மேயர் சைதை துரைசாமி தலைமையில் அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் 40 மைக்ரானுக்கு கீழுள்ள பிளாஸ்டிக் கேரி பேக்குகளை வாங்குவது, விற்பது, பயன்படுத்துவது இல்லை என்று முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் கொத்தவால்சாவடியில் உள்ள ஒரு குடோனில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் ஏராளமாக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மாநகராட்சிக்கு தகவல் வந்தது.
இதையடுத்து 5-வது மண்டல சுகாதார அலுவலர் மணி, துப்புரவு ஆய்வாளர் வாசுதேவன் ஆகியோர் கொத்தவால்சாவடி, டேவிட்சன் தெருவில் உள்ள தனியார் டிரான்ஸ் போர்ட் குடோனில் சோதனை போட்டனர். அங்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் 355 மூட்டைகளில் இருந்ததை கண்டு பிடித்தனர். 18 டன் எடையுள்ள பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.21.3 லட்சம் ஆகும்.
சுற்றுச் சூழலுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் 40 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகளை வியாபாரிகள் வாங்குவது, விற்பது, உபயோகப்படுத்துவது சட்டப்படி குற்றம். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரித்துள்ளது.