தினமலர் 02.08.2012
அதிரடி சோதனை: பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
திருவள்ளூர் : நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில், சுகாதார அலுவலர்கள் திடீர் சோதனை நடத்தி, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் அமல்படுத்தப் பட்டு உள்ளது.
40 மைக்ரானுக்கு கீழே உள்ள பிளாஸ்டிக் கவர்கள், கப்புகள் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்த, தடை விதிக்கப்பட்டு உள்ளது.தடையை மீறி சில கடைகளில் இவற்றை பயன்படுத்தி வருவதும், விற்பனை செய்து வருவதும் குறித்து, நகராட்சி நிர்வாகத்துக்கு புகார்கள் வந்தன.நகராட்சி ஆணையர் சரவணக்குமாரின் உத்தரவுப்படி, சுகாதார அலுவலர் பாலசுப்பிரமணியம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்டப் பொறியாளர் பன்னீர்செல்வம் மற்றும் நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் நேற்று பஜார் வீதி, கொண்டமாபுரம், சினிமா லேன், சி.வி.நாயுடு சாலை, திரு.வி.க., பஸ் நிலையம் ஆகிய இடங்களுக்குச் சென்று, அங்குள்ள உணவகங்கள், தேநீர் விடுதிகள், மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், அழகுசாதனப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் சோதனை நடத்தினர்.அப்போது, 40 மைக்ரானுக்கு கீழே உள்ள பிளாஸ்டிக் பைகள், கப்புகள், கேரி பேக்குகள் ஆகியவை பயன்படுத்தப்பட்டு வருவதைக் கண்டுபிடித்து, பறிமுதல்செய்தனர்.மேற்கொண்டு இப்பொருட்களை பயன்படுத்தினால் அபராதம் விதிப்பதோடு, கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும் என, அலுவலர்கள் எச்சரித்தனர்.