தினமலர் 03.08.2012
பிளாஸ்டிக் விழிப்புணர்வு போட்டி பரிசளிப்பு விழா
சத்தியமங்கலம்: பவானிசாகர் டவுன் பஞ்சாயத்து சார்பில் நடந்த, பிளாஸ்டிக் விழிப்புணர்வு குறித்த போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது.
பவானிசாகர் டவுன் பஞ்சாயத்து பகுதியில், 40 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, பவானிசாகர் டவுன் பஞ்சாயத்துக்குட்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவியருக்கு கட்டுரை, ஓவியம் மற்றும் கவிதை போட்டிகள் நடத்தப்பட்டது. வில்லுப்பாட்டு, நாடகம், கிராமிய பாட்டு உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கும் விழா பவானிசாகர் டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தில் நடந்தது. டவுன் பஞ்சாயத்து தலைவர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். துணைத் தலைவர் செல்வம் முன்னிலை வகித்தார்.செயல்அலுவலர் வில்லியம் ஜேசுதாஸ் பரிசு வழங்கினார். கவுன்சிலர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்துகொண்டனர்.