தினகரன் 04.08.2012
தாராபுரத்தில் பாலித்தீன் பைகளுக்கு தடை
தாராபுரம்: தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பிளாஸ்டிக் கப்புகள் மற்றும் 40 மைக்ரான்குறைவான பாலி த்தீன் பைகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி நகரின் பல இடங்களில் பாலித்தீன் பைகள், கப்புகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதைத் தடுக்கும் வகையில் தாராபுரம் நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் 30 வார்டுகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு ஆய்வு நடத்த வேண்டும். அப்போது பிளாஸ்டிக் பைகள் விற்பது கண்டறியப்பட்டால், முதல் முறை அவற்றை பறிமுதல் செய்து ரூ.100 அபராதமாக விதிக்கவும், இரண்டாம் முறை ரூ.200, மூன்றாம்முறை ரூ. 500 அபராதம் விதிக்கப்படுவதோடு நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதற்கு மன்றம் அனுமதி வழங்கி உள்ளது. இதனடிப்படையில் இனி பாலித்தீன் பைகள் மற்றும் கப்புகள் விற்பனை செய்பவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.