தினகரன் 07.08.2012
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
சோமனூர், : கருமத்தம்பட்டி பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத நகரை அமைப்போம் என்ற லட்சியத்தோடு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி கருமத்தம்பட்டி பேரூராட்சி தலைவர் மகாலிங்கம் தலைமையில் நேற்று நடந்தது. கருமத்தம்பட்டியில் உள்ள புனித மரியன்னை உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பிளாஸ்டிக் உபயோகத்தினால் ஏற்படும் கேடுகள் குறித்து விளக்கும் பதாகைகளை ஏந்திக் கொண்டு வந்தனர். பள்ளியிலிருந்து தொடங்கிய ஊர்வலம், காவல்நிலையம், நால்ரோடு வழியாக சோமனூர் ரோடு பகுதிகளில் நடந்தது.
பேரணிக்கு கருமத்தம்பட்டி பேரூராட்சி தலைவர் மகாலிங்கம் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் சிவசாமி, துணை தலைவர் தங்கமணி மற்றும் கவுன்சிலர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டு துண்டு பிரசுரங்கள் விநியோகித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர். கருமத்தம்பட்டி நால்ரோட்டில் உள்ள அனைத்து கடைகளுக்கும் 40 மைக்ரான் வரை தடிமன் உள்ள பிளாஸ்டிக் பைகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மீறி பயன்படுத்தினால் பிளாஸ்டிக் கழிவுகள் மேலாண்மை மற்றும் கையாளுதல் விதி 2011ன் படி பிளாஸ்டிக் பயன்படுத்துவோர் மீது முதல்கட்டமாக ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் பிரின்ஸ் ஹென்ரே, ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.