தினமலர் 08.08.2012
பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
அம்பாசமுத்திரம் : கல்லிடைக்குறிச்சியில் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி, மனித சங்கிலி நடந்தது.
கல்லிடைக்குறிச்சி டவுன் பஞ்சாயத்து சார்பில் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு குறித்து மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக பேரணி நடந்தது. கல்லிடைக்குறிச்சி டவுன் பஞ்சாயத்து தலைவர் இசக்கிபாண்டியன் தலைமை வகித்தார். செயல் அலுவலர் ராஜமாணிக்கம், துணை தலைவர் முத்துகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.
புது அம்மன் கோயிலில் இருந்து புறப்பட்ட பேரணி 6ம் நம்பர் ரோடு, மாதாங்கோயில் தெரு, மெயின் ரோடு, ரயில்வே ஸ்டேஷன் ரோடு, லட்சுமிபுரம் வழியாக அரசு மேல்நிலைப் பள்ளியை வந்தடைந்தது. அங்கு மனித சங்கலியும் நடந்தது.
கல்லிடைக்குறிச்சி டவுன் பஞ்சாயத்து உறுப்பினர்கள் ஆறுமுகம், பாலசுப்பிரமணியன், ராமசந்திரன், சாந்தா மாரியப்பன், முன்னாள் தலைவர் சுப்பிரமணியன், நகர காங்கிரஸ் தலைவர் லஷ்மன்யாதவ், அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் ஹரிஹரசுப்பிரமணியன், அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.கல்லிடைக் குறிச்சி டவுன் பஞ்சாயத்து சுகாதார ஆய்வாளர் கந்தசாமி நன்றி கூறினார்.