தினமலர் 14.08.2012
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
ஊத்துக்கோட்டை : பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பள்ளி மாணவியரின் விழிப்புணர்வு பேரணி நடந்தது.ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தடை விதிக்க வேண்டும் என, கடந்த ஜூலை 16ம் தேதி நடந்த பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, செப்., 15 முதல் பேரூராட்சியில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
இதுகுறித்து, ஆங்காங்கே விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பலகைகள் வைக்கப் பட்டு உள்ளன. மேலும், அரசுப் பள்ளி மாணவியரின் விழிப்புணர்வு பேரணியும் நேற்று நடந்தது. பேரணியை பேரூராட்சி செயல் அலுவலர் கலாதரன் துவக்கி வைத்தார்.பெண்கள் பள்ளியில் துவங்கிய பேரணி, பஜார் வீதி வழியாக சென்று பேரூராட்சி அலுவலகத்தில் முடிந்தது. பேரணியில் பிளாஸ்டிக்கை ஒழிப்போம், மண் வளம் காப்போம் போன்ற பதாகைகளை ஏந்திக் கொண்டு மாணவியர் சென்றனர். இதில், துணைத் தலைவர் ஷேக்தாவூத் மற்றும் கவுன்சிலர்கள், பள்ளி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.