தினமணி 18.08.2012
பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழிற்கூடம்: ஆட்சியர் திறப்பு
ராமநாதபுரம், ஆக. 17: ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல் முறையாக பிளாஸ்டிக் அரவை மற்றும் மறுசுழற்சி செய்யும் தொழிற்கூடத்தினை ஆட்சியர் க.நந்தகுமார் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் மையப்பகுதியில் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில், பிளாஸ்டிக்அரவை மற்றும் மறுசுழற்சி செய்யும் தொழிற்கூடத்தினை ஆட்சியர் க.நந்தகுமார்திறந்து வைத்தார்.
சக்கரக்கோட்டை ஊராட்சி அளவிலான கூட்டமைப்பை சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் 15 பேருக்கு தினசரி இங்கு வேலைவாய்ப்பு பெறும் வகையில் ரூ. 3.75 லட்சம் மதிப்பீட்டிலான தொழிற்கூடத்தை திறந்து வைத்த ஆட்சியர் கூறியதாவது:
சுற்றுச்சூழலை எவ்விதத்திலும் பாதிக்காத வகையில் பிளாஸ்டிக், பாலித்தீன் ஆகியனஅரவை செய்யவும், மறுசுழற்சி செய்யும் வகையிலான நவீன இயந்திரங்கள் இத்தொழிற்கூடத்தில் நிறுவப்பட்டுள்ளது. மறுசுழற்சி செய்து தயாரிக்கப்படும் துகள்கள் தார்ச்சாலைகள் போடுவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மட்டும் தார்ச்சாலைகள் போடுவதற்காக மொத்தம் 11 ஆயிரம் டன் தேவைப்படுகிறது.
இதிலிருந்து உற்பத்தியாகும் துகள்கள் மாவட்டத்தின் தேவைக்கே பற்றாத நிலையில்தான் உள்ளது. எனவே பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் குப்பைகளை பொதுமக்கள் கண்ட இடங்களில் போடாமல் அவற்றை சேகரித்து இங்கு கொண்டு வந்து கொடுக்கலாம். ஒரு கிலோ ரூ.3-க்கு பாலித்தீன் பைகள் கொள்முதல் செய்யப்படும். தார்ச்சாலைகள் போடுகையில் 90 சதவிகிதம் தாரும், 10 சதவிகிதம் பிளாஸ்டிக் துகள்களும்இணைத்து சாலைகள் போடும் போது அதன் தரம் நீண்டநாட்களுக்கு தரமானதாகஇருக்கிறது என்பதால் இதன் தேவை அதிகமாக இருக்கிறது. ராமநாதபுரம் தவிர சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் பிளாஸ்டிக் சேகரித்து இங்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் ஆட்சியர் க.நந்தகுமார் தெரிவித்தார்.
திறப்பு விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் அய்யப்பன், மகளிர் திட்ட அலுவலர் அய்யம் பெருமாள், செயற்பொறியாளர் ராமசாமி, பட்டினம்காத்தான் ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.எம்.நூர்முகம்மது ஆகியோர் உள்பட முக்கியப் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.