Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஒரே நாளில் சிக்கிய 1000 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் "விழித்து கொண்ட' மாநகராட்சி அதிகாரிகள்

Print PDF
தினமலர்            19.08.2012

ஒரே நாளில் சிக்கிய 1000 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் "விழித்து கொண்ட' மாநகராட்சி அதிகாரிகள்

திருப்பூர்: எளிதில் மக்காத தன்மை கொண்ட பிளாஸ்டிக் பைகளால், ஏற்படும் அபாயத்தை கருத்திற்கொண்டு தமிழகம் முழுவதும் பிளாஸ்டி பைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்கள் நிறைந்ததிருப்பூர் மாநகரில் தினமும் மலைபோல் தேங்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்த சுகாதாரத் துறை திணறிவரும் நிலையில், நேற்று ஒரே நாளில் ஆயிரம் கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்செய்யப்பட்டது. இதே போன்ற நடவடிக்கை தொடர்ந்தால் மட்டுமே பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை கட்டுக்குள் கொண்டுவர முடியும், என்று பொதுமக்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் வலியுறுத்துகின்றனர்.

திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில், தடை செய்யப்பட்ட பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பைகள், ஒரு முறை பயன்படுத்தும் டம்ளர்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. திருப்பூரில் தினமும் தேங்கும் 550 டன் குப்பையில், 100 டன் அளவுக்கு பிளாஸ்டிக் குப்பைகள் இருக்கின்றன. அதனை அப்புறப்படுத்த முடியாமல் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் தினமும் திணறி வருகின்றனர். சாக்கடை கால்வாய்களில் தேங்கும் பிளாஸ்டிக் பைகளால், ஒட்டுமொத்த மாநகரின் சுகாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டு, மலேரியா, டெங்கு, வைரஸ் என பல வகை காய்ச்சல்கள் மக்களை தாக்கி வருகின்றன.

புதிய கமிஷனர் பொறுப்பேற்றதும், 40 மைக்ரானுக்கும் குறைவான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடுதல் தடை விதித்தார்.மாநகராட்சி சார்பில், வணிக நிறுவனங்கள், கடைகள் மற்றும் ஓட்டல் களுக்கு, எச்சரிக்கை நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டது. இருப்பினும், அவ்வப்போது திடீர் ஆய்வு நடத்தி, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த ரெய்டின் போது, பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திய கடைகளுக்கு, 19 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது; இரண்டு டன் எடையுள்ள பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில்,பல்லடம் ரோடு, வீரபாண்டி பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், பேக்கரிகள், டீக்கடைகள் மற்றும் ஓட்டல்களில், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள் இருப்பது தெரியவந்தது.

ஆய்வு நடந்த மூன்று மணி நேரத்தில், ஆயிரம் கிலோவுக்கும் (ஒரு டன்) அதிகமாக பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதை பயன்படுத்திய கடை உரிமையாளர்களுக்கு 500 முதல் 1,500 ரூபாய் வரையில் அபராதம் விதிக்கப்பட்டது.

மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில்,"பிளாஸ்டிக் பைகள் ஒழிப்புநடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இன்று (நேற்று) நடந்த ஆய்வில், ஒரு டன் அளவுக்கு கேரி பேக், டம்ளர்கள் பறிமுதல் செய்தோம். மொத்தம் 15 ஆயிரத்து 250 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அடிக்கடி திடீர் ஆய்வு நடத்தி, தடை செய்யப்பட்ட பொருட்களைவிற்பவர்களுக்கும், பயன்படுத்துவோருக்கும் அபராதம் விதிக்கப்படும். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் உடனுக்குடன் "ஸ்ரெட்டர்' மெஷின் மூலமாக தூளாக மாற்றப்படும்,' என்றனர்.
Last Updated on Monday, 20 August 2012 07:13