தினமணி 20.08.2012
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
பெரம்பலூர், ஆக. 19: பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் பேரூராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி அண்மையில் நடைபெற்றது.
பேரணியை தொடக்கி வைத்து, பேரூராட்சி தலைவர் என். பாப்பம்மாள் பேசியது:
பிளாஸ்டிக் கழிவுகளை முற்றிலும் ஒழிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. அதன்படி சிறு வியாபாரிகள், பூக்கடைக்காரர்கள், காய்கறி வியாபாரிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர் ஆகியோரை அழைத்து பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பிளாஸ்டிக் பொருள்கள் ஒழிப்பு குறித்து மாணவ, மாணவிகளிடையே பேச்சு, கட்டுரை, போட்டிகளும், கலை நிகழ்ச்சிகள், தெருமுனை பிரசாரம் ஆகியவை நடத்தப்பட்டுள்ளன.எனவே, குரும்பலூர் பேரூராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பொருள்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றார் அவர். குரும்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய பேரணி, பிரதான சாலைகள் வழியே சென்று பேரூராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது.
இதில், துணைத் தலைவர் செந்தில்குமார், செயல் அலுவலர் ஆறுமுகம், பேரூராட்சி உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.