தினமணி 22.08.2012
பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி மனிதச் சங்கிலி
செங்கம், ஆக. 21: செங்கம் பேரூராட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மனிதச்சங்கிலியில் பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி உறுதிமொழி எடுக்கப்பட்டது.
செங்கம் பேரூராட்சி, ஸ்ரீ வாசவி கிளப் ஆகியவை இணைந்து மில்லத் நகர் பகுதியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மனிதச்சங்கிலி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் சென்னம்மாள் முருகன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் பார்த்தசாரதி முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் மோகன்ராஜ் வரவேற்றார்.
வேலூர் மண்டல் பேரூராட்சிகள் உதவி இயக்குநர் மலையமான் திருமுடிகாரி, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த உறுதி மொழியை வாசித்தார். ஸ்ரீ வாசவி கிளப் தலைவர் சுதாகரன், செயலர் பிரகாஷ்பாபு, கௌரவத் தலைவர் பாபு, ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் ஆசைமுசிரஅகமத் உள்பட செங்கம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளி மாணவர்கள், பேரூராட்சி உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.