தினகரன் 25.08.2012
பிளாஸ்டிக் கப் பறிமுதல் சுவாமிமலையில் திருமண மண்டபங்களில் சோதனை
கும்பகோணம்: கும்பகோணத்தை அடுத்த சுவாமிமலையில் திருமண மண்டபங்களில் நேற்று டவுன் பஞ்., நிர்வாகத்தினர் அதிரடியாக சோதனை நடத்தி பிளாஸ்டிக் கப்புகள், தண்ணீர் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, திருமண மண்டபத்திற்கு அபராதம் விதித்தனர்.சுவாமிமலை டவுன் பஞ்., நிர்வாகத்திற்குட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த வாரம் சுவாமிமலை பள்ளி மாணவர்களைக் கொண்டு நகர் முழுவதும் விழிப்புணர்வு பிரசாரம், பேரணி நடத்தப்பட்டது.
மேலும் ஒவ்வொரு வணிக நிறுவனத்திடமும் பிளாஸ்டிக் பைகளை உபயோகப்படுத்த வேண்டாம் என வேண்டுகோளும் விடுக்கப்பட்டது.இந்நிலையில் சுவாமிமலையில் உள்ள சில திருமண மண்டபங்களில் நேற்று பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து டவுன் பஞ்., தலைவர் ராதாகிருஷ்ண ஸ்தபதி, துணைத் தலைவர் கல்யாணகுமார், செயல் அலுவலர் சுரேஷ் மற்றும் டவுன் பஞ்., பணியாளர்கள் பத்துக்கும் மேற்பட்ட திருமண மண்டபங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.இதில், இரண்டு மண்டபங்களில் இருந்து பத்து மூட்டை தண்ணீர் பாக்கெட், ஆயிரக்கணக்கான பிளாஸ்டிக் கப்புகளை பறிமுதல் செய்து அந்த இரு மண்டபத்திற்கும் தலா 250 ரூபாய் அபராதம் விதித்தனர்.""இந்த அதிரடி நடவடிக்கை மேலும் தொடரும்,'' என டவுன் பஞ்., தலைவர் ராதாகிருஷ்ணஸ்தபதி தெரிவித்துள்ளார்.